மட்டக்களப்பில் இருந்து மொறட்டுவைக்கு நேரடி பஸ்சேவை ஆரம்பம்

முதன்முறையாக மட்டக்களப்பிலிருந்து மொறட்டுவைக்கான நேரடி பஸ்சேவை புத்தாண்டு தினமான நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மொறட்டுவ மற்றும் பேராதனை பல்கலை கழக மாணவர்களின் நன்மைகருதி  ஊவா மற்றும் மத்திய மாகாணத்தினூடாக இச்சேவை இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச்சபை மட்டக்களப்பு டிப்போ முகாமையாளர் துரை.மனேகரன் தெரிவித்தார்.

தினமும் காலை 7.15 மணிக்கு மட்டக்களப்பு பிரதான பஸ்நிலையத்திலிருந்து புறப்படும் இப்பஸ்சேவை வவுணதீவு, கரடியனாறு, பதியதளாவ. மஹியங்கனை, பதுளையூடாக கண்டி, பேராதேனிய வழியாக வறக்காப்பொலயூடாக களனி, வெள்ளவத்தையூடாக மொறட்டுவையை அடையுமென அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய பஸ் சேவை ஆரம்ப வைபவத்தில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மாணிக்கம் உதயகுமார் இலங்கை போக்குவரத்துச்சபை டிப்போ பிராந்திய செயலாற்று முகாமையாளர் ஏ.எல்.சித்தீக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.