பட்டதாரிகள் 2590 பேருக்கு செவ்வாயன்று அலரிமாளிகையில் நியமனக் கடிதங்கள் வழங்க ஏற்பாடு

அமைச்சரவைத் தீர்மானத்தின்படி நாடு முழுவதிலும் இருந்து  தொழில் வாய்ப்பற்றிருக்கும் 2590 பட்டதாரிகளுக்கு செவ்வாய்க்கிழமையன்று அலரிமாளிகையில் வைத்து பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களால் பயிற்சிக்கான இணைப்புக் கடிதம் வழங்கப்படும் என்று பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் எஸ்.ஆர். முஹம்மத் அறிவித்துள்ளார்.


தொழில் வாய்ப்பற்றிருக்கும் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு பயிற்சியில் இணைத்துக் கொள்ளப்படுவது சம்பந்தமான பயிலுநர் நியமனக் கடிதங்கள் வழங்கப்படுவது பற்றிய கடிதங்கள் தொழிலற்றிருக்கும் பட்டதாரிகளுக்கு சனிக்கிழமையன்று கிடைக்கப்பெற்றுள்ளன.

கடந்த வருடம் ஜுலை மாதம் 09 ஆம் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைவாக பயிலுநர் தொடர்பான பயிற்சிக்காக இணைக்கப்பட தகைமை பெற்ற பட்டதாரிகளுக்கு பயிற்சியில் இணைத்துக் கொள்ளப்படுவதற்கான கடிதங்கள் வழங்கும் நிகழ்வு அலரிமாளிகையின் பிரதான மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ தலைமையில் இடம்பெறவுள்ளது.

பல்வேறு காரணங்களால் ஏற்கெனவே வழங்கப்பட்ட நியமனம் பெறத் தவறியிருந்த தொழிலற்ற பட்டதாரிகளில் பலர் தாங்கள் மீண்டும் விண்ணப்பித்ததன் பேரில் கடந்த வருடம் பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சினால் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

அந்த நேர்முகப்பரீட்சைக்குத் தோற்றி அதிலிருந்து தகைமையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 2590 பேருக்கே தற்சமயம் பயிற்சியில் இணைத்துக் கொள்ளப்படுவது சம்பந்தமான பயிலுநர் நியமனக் கடிதங்கள் வழங்கப்படவிருக்கின்றது.

இந்த நியமனத்துக்காக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தொழிலற்ற 242 பட்டதாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாக தொழிலற்ற பட்டதாரிகள் சங்கத்தின் இணைப்பாளர் ஆர். தீபாகரன் தெரிவித்தார்.

இது சம்பந்தமான மேலதிக விவரங்கள் தேவைப்படுவோர் 0112673 560 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.