மட்டக்களப்பில் பிரபல உணவகம் ஒன்றின் உணவில் கரப்பான் பூச்சி –வழக்கு தாக்கல்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட உணவகங்கள் தொடர்பில் அண்மைக்காலமாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் அது தொடர்பில் பொதுச்சுகாதார பரிசோதகர்களும் பல்வேறு நடவடிக்கைகளையும் எச்சரிக்கையினையும் விடுத்துவருகின்றனர்.

எனினும் சில உணவகங்கள் அவற்றினை பின்பற்றாத நிலையில் மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையிலேயே செயற்பட்டுவருவதை காணமுடிகின்றது.

அன்றாடம் இயந்திர வாழ்க்கையினை அனுபவித்துவரும் நகர்ப்புற மக்கள் தமக்கான உணவுகளை உணவகங்களிலேயே பெற்றுக்கொள்கின்றனர்.

அதிகளவான விலையினை சில உணவகங்கள் பெறுகின்றபோதிலும் சுகாதாரம் தொடர்பிலான நம்பிக்கையில் அந்த உணவகங்களில் உணவுகளை பெற்றுக்கொள்கின்றனர்.

அந்த வகையில் மட்டக்களப்பு நகரில் பிரபல உணவகம் ஒன்றில் இருந்து பொதுமகன் ஒருவர் பெற்றுச்சென்ற உணவில் கராப்பான் பூச்சு இறந்து கிடந்ததைக்கண்டு அது தொடர்பில் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் எம்.உதயகுமாரின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளார்.

அதனைத்தொடர்ந்து கோட்டைமுனை பொதுச்சுகாதார பரிசோதகர் வி.சி.சகாதேவன் தலைமையிலான பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த உணவகத்திற்கு எதிராக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக கோட்டைமுனை பொதுச்சுகாதார பரிசோதகர் வி.சி.சகாதேவன் தெரிவித்தார்.