மட்டக்களப்பில் பெண்கள் அமைப்பினர் இரண்டாவது தினமாகவும் கவன ஈர்ப்பு போராட்டம்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பணிப்பெண்ணை காப்பாற்றுமாறு கோரி மட்டக்களப்பில் இரண்டாவது தினமாகவும் இன்று வியாழக்கிழமை மாலை பெண்கள் அமைப்பினர் கவன ஈர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டுவருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள், அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகள்; உட்பட சமூக ஆர்வலர்களும் இந்த போராட்டத்தில் இணைந்துகொண்டனர்.

இலங்கையை சேர்ந்த வீட்டுப்பணிப்பெண் ஒருவருக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை கல் எறிந்து கொலைசெய்யவேண்டும் என சவூதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

குறித்த பெண் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையிலும் அது தொடர்பில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையே இருந்துவந்ததாக கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.

இதன்போது கவன ஈர்ப்பு வீதி நாடமும் நாடக அசைவுகளும் மேற்கொள்ளப்பட்டதுடன் பறை மேளமும் முழங்கப்பட்டது.