காணி அபகரிப்பினை தடுத்து நிறுத்துமாறு கோரி கிரான்குளம் மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிரான்குளம்,தர்மபுரம் பகுதியில் காணிகள் அபகரிக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரி அப்பகுதி மக்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் முன்பாக அமைதி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தினர்.

பொலிஸாரின் ஆதரவுடன் முன்னாள் ஜனாதிபதி ஜெயவர்த்தனவின் மகன் ரவி ஜெயவர்த்தனவினாலும் பிரதேசத்தில் உள்ள சிலரினாலும் இந்த காணி அபகரிக்கு நடாத்தப்படுவதாகவும் அவற்றை தடுத்து நிறுத்துமாறு கோரியுமே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமக்குள்ள அரசியல் மற்றும் பண பலத்தினைப்பாவித்து தாம் நீண்டகாலமாக பராமரித்துவரும் காணிகளை அடாவடித்தனமாக அபகரிப்பதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.

தமது காணிகளின் வேலைகளை பிரித்து எரிந்துவிட்டும் தமது காணிகளில் உள்ள தென்னை மரங்களை அகற்றிவிட்டும் புல்டோசர் கொண்டு காணிகளை துப்புரவு பண்ணி காணிகளை அபகரிப்பதாகவும் இதற்கு விசேட அதிரடிப்படையினர்,பொலிஸார் பாதுகாப்பு வழங்குவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியில் உள்ள நூறு ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் இவ்வாறு அபகரிக்கப்படுவதாகவும் இதனை தடுத்து நிறுத்த மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மாவட்ட அரசாங்க அதிபரை சந்திக்க செல்லமுற்பட்டபோது மாவட்ட செயலகத்தின் வாயிலில் பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையினை நடாத்தியதுடன் அதனைத்தொடர்ந்து மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன்,காணி ஆணையாளர் விமல்ராஜ் ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்.

தமது காணிகளை அபகரிப்பது தொடர்பில் தாம் எதுவும் கதைத்தால் தாம் பொலிஸாரினால் கைதுசெய்யப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ்மா அதிபரின் ஆதரவுடன் இந்த காணி அபகரிப்பு பணிகள் நடைபெறுவதாகவும் இதனை தடுத்து நிறுத்தி தமது பகுதி காணிகளில் தமது மக்கள் உரிமைகளைப்பெறுவதற்கான வழிவகைகளை ஏற்படுத்தி தருமாறும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.