நல்லாட்சி அரசாங்கம் பயங்கரவாத தடையினை நீக்க வலியுறுத்தி 1000தபாலட்டை அனுப்பும் போராட்டம்

நல்லாட்சி அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கவேண்டும் என வலியுறுத்தி ஆயிரம் அஞ்சல் அட்டைகளை ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கும் போராட்டம் மட்டக்களப்பில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிவில் அமைப்புகள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையம் இந்த போராட்டத்தினை முன்னெடுத்தது.

மட்டக்களப்பு நகரின் காந்தி பூங்கா அருகில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கையெழுத்துப்போராட்டம் நகரின் பல்வேறு பகுதிகளிலும் நடாத்தப்பட்டது.

அஞ்சல் அட்டைகளில் கையெழுத்துப்பெற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆயிரம் அஞ்சல் அட்டைகளை அனுப்பிவைக்கும் வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் செயலாளர் எஸ்.சிவயோகநாதன் தெரிவித்தார்.

இந்த நாட்டில் நல்லாட்சி நிலவும் இந்தவேளையில் பயங்கரவாத தடைச்சட்டம் அவசியமற்றது எனவும் அவற்றினை நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தி இந்த அஞ்சல் அட்டை அனுப்பும்போராட்டம் நடாத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.