மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைக்கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் நிறைவு

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் இன்று காலை கைவிடப்பட்டுள்ளது.


மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று காலை சிறைச்சாலைக்கு சென்று இளநீர் வழங்கி உண்ணாவிரத போராட்டத்தினை நிறைவுசெய்தனர்.

சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலைசெய்வதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் மேற்கொண்டுவருகின்ற நிலையில் கடந்த 08ஆம் திகதி முதல் மேற்கொண்டுவந்த உண்ணாவிரத போராட்டம் இன்று கைவிடப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நடவடிக்கையெடுத்த ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாக இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

எனினும் காலம் கடந்த நிலையிலேயே இந்த நடவடிக்கையெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த விஜயத்தின்போது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஞா.சிறிநேசன்,சீ.யோகேஸ்வரன்,எஸ்.வியாளேந்திரன் ஆகியோர் இணைந்திருந்ததுடன் ஊடகங்களுக்கு கருத்தும் தெரிவித்தனர்.