நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா இலண்டன் பயணம்

இங்கிலாந்தில் இம்மாதம் 18 தொடக்கம் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பொதுநலவாய உள்ளுராட்சி நிருவாக 20வது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதையடுத்து அவர்  திங்கட்கிழமை இலண்டன் பயணமாகியுள்ளார்.


இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் தலைவர்கள் பல்வேறுபட்ட உள்ளுராட்சி நிருவாக முறைமைகளைப் பற்றி விவாதிக்கவுள்ளனர்.

அத்துடன் இங்கிலாந்து உள்ளுராட்சி மன்ற அமைப்புக்களின் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “ஐரோப்பாவில் அகதிகளின் நெருக்கடிநிலை குறித்து கையாளுதலில் உள்ளுராட்சி மன்றங்களின் பங்கு” பற்றியும் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை பொதுநலவாய உள்ளுராட்சி நிருவாக மாநாடு இடம்பெறுவதற்கு முன்னதாக பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் கமலேஸ் சர்மாவுடனான சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மூன்று நிகழ்வுகளிலும் முக்கிய பங்குபற்றுராக அலிஸாஹிர் மௌலானாவும் அழைக்கப்பட்டுள்ளார்.

அலிஸாஹிர் மௌலானா அவர்கள் பொதுநலவாய உள்ளுராட்சி மன்றங்களின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.