இளைஞர்களை எந்த சமூகமும் புறக்கணிக்க கூடாது –ஞா.சிறிநேசன் பா.உ.

இளைஞர்களை எந்தவொரு சமூகமும் புறக்கணிக்ககூடாது.அவர்களின் சக்தியினை சரியான முறையில் ஆக்கபூர்வமான வழிக்கு கொண்டுசெல்வதன் மூலமாக அபிவிருத்தியடைய முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

2015 இளைஞர் பாராளுமன்றத்திற்கு இணையாக “துருணு சிரம சக்தி”தேசிய கிராம அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று திங்கட்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இளைஞர் கழக பிரதேச சம்மேளனம், மாவட்ட சம்மேளனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இதன் மட்டக்களப்பு மாவட்ட பிரதான நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கூழாவடியில் இன்று காலை நடைபெற்றது.

மட்டக்களப்பு இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எட்வேர்ட் ஜெயராசா பயஸ்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் சுகத் ஹேமாவிதாரண மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா,மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர் திருமதி கே.கலாராணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது “துருணு சிரம சக்தி”தேசிய கிராம அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அமைக்கப்படவுள்ள அறநெறிப்பாடசாலைக்கான அடிக்கல் நடப்பட்டது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இளைஞர்கள் வலுவூட்டப்படவேண்டும் பலப்படுத்தப்படவேண்டும்.இளைஞர்கள் வளத்;தினை சரியான முறையில் முகாமைத்துவப்படுத்தாவிட்டதல் ஆக்கபூர்வமான இளைஞர் சக்தி அழிவுப்பாதைக்கு செல்லவேண்டிய வாய்ப்பு ஏற்படும் என்பதை நாங்கள் கடந்த கால நிகழ்வுகளில் இருந்து கற்கவேண்டியதாகவுள்ளது.

இளைஞர் பருவம் என்பது வேகமாக செயற்படக்கூடிய பருவம்.விவேகமாக செயற்படும் பருவம்.அதனை சரியாக பயன்படுத்தும் நாடுகள் வளர்ந்து வல்லரசாக நிற்கின்றது.அந்த இளைஞர் பராயத்தினரை கண்டுகொள்ளாத நாடுகள் அபிவிருத்தியடையாத நிலையிலேயே உள்ளன.

இலங்கையினை பொறுத்தவரையில் தற்காலத்தில் இளைஞர்களை பயன்படுத்தவேண்டும் அவர்களை வளர்த்தெடுத்து சிறப்பான தலைவர்களாக நாட்டுக்கு பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற சிந்தனையின் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்கள் ஊடாக பிரதேச அபிவிருத்திகளை மேற்கொள்வது என்பது பாராட்டக்கூடியது.

இளைஞர்களை எந்தவொரு சமூகமும் புறக்கணிக்ககூடாது.அவர்களின் சக்தியினை சரியான முறையில் ஆக்கபூர்வமான வழிக்கு கொண்டுசெல்வதன் மூலமாக அபிவிருத்தியடைய முடியும்.

முழு இளைஞர்களின் சக்தியையும் பயன்படுத்தி அந்நிய நாடுகளில் உள்ள புத்திசாதுரியமான இளைஞர்களையும் பயன்படுத்தியே அமெரிக்கா ஒரு வல்லரசாக வந்துள்ளது.ஒரு காலகத்தில் அடிமைகளாக பயன்படுத்திய நீக்ரோ இனத்தினை இன்று ஜனாதிபதியாக மாற்றக்கூடிய விதத்தில் இளைஞர்கள் மனித வளத்தினை பயன்படுத்தியதன் காரணமாக உலகின் முதலாவது வல்லரசாக திகழ்கின்றது.

இந்த உதாரணங்களை இலங்கை போன்ற நாடுகள் பின்பற்றும் நிலையேற்படுமானால் அபிவிருத்திகள் ஊடாக வளம்பெறமுடியும்.