தமிழ் கைதிகள் விடயத்தில் நீதியாக நடக்காவிட்டால் சுவாமிநாதன் பதவி வலகுவாரா –ஜனா கேள்வி

சுவாமிநாதன், கதிர்காமர் வழி நன்றிக் கடன் தீர்ப்பாரா யதார்த்தம் உணர்ந்து தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையைத் தீர்ப்பாரா தமிழ் கைதிகளின் விடயத்தில் நீதியாக நடக்க முடியாது விடின் தார்மீகப் பொறுப்பையேற்று பதவி விலகுவாரா என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண சபையின் தற்போதைய உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) கேள்வி எழுப்புகிறார்.

தமிழ் அரசியல் கைதிகள் குறித்த பிரச்சினைகள் தீவிரமடைந்திருக்கின்ற நிலையில், டி.எம்,சுவாமிநாதன் சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு அமைச்சராக பதவியேற்றமை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்தக் கேள்வியை எழுப்பினார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

ஆட்சிமாற்றம் ஏற்பட்டு காட்சி மாறினாலும் தமிழர் தம் துயரம் மட்டும் மாறாது என்பதுதான் தமிழர் தலைவிதியாகும். இனப்பிரச்சினை உக்கிரமடைந்திருந்த காலத்தில் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க தமிழ்ப் பெயரைக் கொண்டிருந்த லக்ஷ்மன் கதிர்காமர் அவர்களை வெளிநாட்டு அமைச்சராக்கி அவரைக் காட்சிப்படுத்துவதன் மூலம் சர்வதேசத்துக்கு இலங்கையின் வெளிநாட்டமைச்சர் ஒரு தமிழர் எனவும் இலங்கையில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதில்லை எனவும் பரப்புரைகளை மேற்கொள்ள வழிவகுத்தார்.

தனக்கு சந்திரிகாசெய்த நன்றிக்கு கை மாறாக லக்ஸ்மன் கதிர்காமரும் சர்வதேசம் எங்கும் சென்று இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை எனவும் இங்கு இருப்பது பயங்கரவாதப்பிரச்சினையே எனவும், பரப்புரை செய்து தனது நன்றிக் கடனைத் தீர்த்துக் கெணர்டார்.

அதே காட்சி மீண்டும் தற்போது அரங்கேறுகின்றது. இன்றைய நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் பூதாகாரமாக எழுந்துள்ள நிலையில் அதனைக் கையாள்வதற்கு தமிழரான டி.எம்.சுவாமிநாதனை தற்போது சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு அமைச்சராக்கியதன் மூலம் அரசு எதிர்பார்ப்பது என்ன?

அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளதன் மூலம் டி.எம்.சுவாமிநாதன் செயற்படப் போவது எவ்வாறு.

கதிர்காமர்போல தனது பேரினவாத எஜமானர்களை திருப்திப்படுத்தப்போகின்றாரா, அரசியல் கைதிகள் எவரும் இல்லை. பயங்கரவாதிகள் தான் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்ற பேரினவாத அரசின் பல்லவிக்கு தாளம் போடப் போகின்றாரா? அல்லது தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையின் ஜதார்த்தத்தை உணர்ந்து அவர்களது பிரச்சினைகளைத் தீர்க்க முயல்வாரா?

பேரினவாதிகள் எமடது பிரச்சினைகள் உக்கிரமடையும் பொது அதனைத் தமிழர்களிடம் கைமாற்றி தாமும் தீர்க்காது அவரையும் தீர்க்கவிடாது தமது எண்ணங்களையும் கருத்துக்களையும் அவரது வாயாலேயே வெளிப்படுத்தும் தந்திரோபாயத்தினை கடந்த காலங்களில் மேற்கொண்டு வந்துள்ளனர் என்ற யதார்த்தத்தை சுhவாமிநாதன் அவர்கள் புரிந்து கொண்டு இந்தப் பொறுப்பினைக் கையாள வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகும். அவ்வாறில்லாதுவிடின், இதிலிருந்து விலகுவதே அவரது தார்மீகப் பொறுப்பாக அமையும்.

இதன் மூலமே தமிழ்க் கைதிகள் விடயம் தமிழ் அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது என அரசு சர்வதேசத்துக்குக்கூறி தமிழ் அரசியல் கைதிகள் அவலத்தையும் தனக்குச் சாதகமாக்கும் கபடத்தனத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும்.

எனவே சுவாமிநாதன் என்ன செய்யப் போகின்றார். கதிர்காமர் வழி நன்றிக் கடன் தீர்ப்பாரா யதார்த்தம் உணர்ந்து தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையைத் தீர்ப்பாரா தமிழ் கைதிகளின் விடயத்தில் நீதியாக நடக்க முடியாது விடின் தார்மீகப் பொறுப்பையேற்று பதவி விலகுவாரா.