மட்டக்களப்புக்கு பிரித்தானிய பாராளுமன்ற குழு வருகை

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பிற்கு விஜயம் செய்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஜென்னி டொங்கே தலைமையிலான 9 உறுப்பினர்கள் இந்தக்குழுவில்  உள்ளடங்கியிருப்பதுடன் இலிங் சௌத்தல் நாடாளுமன்ற உறுப்பினர் விரேந்திரசர்மா, லண்டன் நாடாளுமன்ற ஒன்றியத்தைச் சேர்ந்த நிகல் இவான்ஸ் உட்பட 5 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த இவர்கள் இனப்பெருக்க மற்றும் பாலியல் சுகாதாரம் தொடர்பான மீளாய்வு சந்திப்பில் கலந்து கொண்டனர்.

வைத்தியாசாலை பணிப்பாளர் டொக்டர் எம்.எஸ்.இப்றாலெப்பை தலைமையில் நடைபெற்ற சந்திப்பில் இலங்கை குடும்பத்திட்ட சங்க தலைவி பெமிலா சேனநாயக்க,  வைத்திய நிபுணர் கே.கடம்பநாதன், உள்ளிட்ட  வைத்திய நிபுணர்கள்,  வைத்திய அதிகாரிகள், தாதிய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

போதனா வைத்தியசாலையின் கீழ் இயங்கும் மிதுறுபியச நட்பு இல்லத்தினூடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இனப்பெருக்க மற்றும் பாலியில் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆலோசனைகளை வழங்க இலங்கையில் சிறந்த நிலையமாகவும் முதன்மை நிலையமாகவும் மட்டக்களப்பு நட்பு இல்லம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்களால், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நிதி உதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.