மட்டக்களப்பில் ஐ.நா.சாட்சியங்களை பதிவுசெய்தது –கண்ணீருடன் கதறிய உறவினர்கள்

கிழக்கு மாகாணத்தில் காணாமல்போனவர்கள் தொடர்பில் கண்டறிவதற்காக வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் பிரதிநிதிகள் இன்று முற்பகல் மட்டக்களப்புக்கு விஜயம் செய்தனர்.

மட்டக்களப்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு விஜயம் செய்த அவர்கள் அங்கு ஒரு குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதேபோன்று மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.மண்டபத்தில் காணாமல்போனவர்களின் உறவினர்களையும் சந்தித்து இதன்போது கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பில் மட்டக்களப்பு ,மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இருந்து இருந்து காணாமல்போன சுமார் 600பேரின் உறவினர்கள் கலந்துகொண்டதுடன் தமது நிலையையும் எடுத்துக்கூறினர்.

காணாமல்போன தமது உறவிகளை கண்டுபிடிப்பதற்கு தங்களுக்கு உள்ள தற்போதைய ஒரே வழி ஐ.நா.வின் விசாரணை எனவும் இங்கு காணாமல்போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

தமது நிலைமையினையும் தமது குழந்தைகளின் நிலைமையினையும் கருத்தில்கொண்டு தமது உறவுகள் காணாமல்போனமை தொடர்பில் உறுதியான பதிலை அரசாங்கம் வழங்கவேண்டும் எனவும் இங்கு கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

இதன்போது காணாமல்போனவர்களின் உறவினர்கள் கைகளில் காணாமல்போனவர்களின் புகைப்படங்கள் தாங்கியிருந்த பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.