நோயிலிருந்து காக்க ஆரோக்கியமான உணவு வழக்கத்தை வலியுறுத்தி களுதாவளையில் ஊர்வலம்

புற்றுநோய் தாக்கத்திற்குள்ளானவர்கள் உள்ள மாவட்டம் என மட்டக்களப்பு மாவட்டம் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் புற்றுநோய் தாக்கத்தில் இருந்து  இருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகள் ஆரமபிக்கப்பட்டுள்ளன.


மரக்கறிகளுக்கு பாவிக்கப்படும் இரசாயண பதார்த்தங்களின் தாக்கங்கள் காரணமாகவே அதிகளவில் இந்த புற்றுநோய் தாக்கம் ஏற்படுவதாக அண்மையில் சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் பாதுகாப்பான சமூகத்தினை கட்டியெழுப்பும் வகையில் மாபெரும் ஊர்வலம் ஒன்று இன்று காலை மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட களுதாவளை பகுதியில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட எகட் கரித்தாஸ் மற்றும் மாவட்ட விவசாய திணைக்களம் இணைந்து இந்த கவன ஈர்ப்பு பேரணியை நடாத்தினர்.

சேதனைப்பசளையை பயன்படுத்தி விவசாய நடவடிக்கையினை மேற்கொள்வதை வலியுறுத்தியும் இரசாயணங்கள் விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதனால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பிலும் இந்த பேரணியின்போது விழிப்புணர்வூட்டப்பட்டது.

அத்துடன் குடும்பத்தினை நோயற்ற குடும்பமாக கட்டியெழுப்பும் வகையில் வீட்டுதோட்ட செய்கை தொடர்பிலும் இங்கு விழிப்புணர்வூட்டப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட எகட் கரித்தாஸ் இயக்குனர் அருட்தந்தை ஜிரோன் டிலிமா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் எம்.கோபாலரட்னம்,மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் செல்வி மங்களேஸ்வரி சிவஞானம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு,ஆயித்தியமலை,களுவாஞ்சிகுடி ஆகிய பிரதேசங்களில் இருந்து பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

பேரணியல் கலந்துகொண்டோர் நச்சு பதார்த்தங்களினால் ஏற்படும் தாக்கங்கள் தொடர்பிலான பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

ஊர்வலத்தினை தொடர்ந்து களுதாவளை கலாசார மண்டபத்தில் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது விவசாயம் மற்றும் மரக்கறிச்செய்கையில் ஈடுபடும்போது சேதனைப்பசளைகளை பயன்படுத்துவதன் அவசியம் தொடர்பிலும் இரசாயணப்பசளைகளை தவிர்ப்பதன் அவசியம் தொடர்பில் கருத்துரைகள் வழங்கப்பட்டன.