பிரதீப் மாஸ்டர் மட்டக்களப்புக்கு கொண்டுவரப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

குற்றப்புலனாய்வுத் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த  தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான சந்தேக நபர்கள் இருவர்  இன்று மட்டக்களப்பு  நீதவான்  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின்  முன்னாள் தேசிய அமைப்பாளரான பிரதீப் மாஸ்டர் எனப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா மற்றும் கஜன் மாமா  எனப்படும் கனகநாயகம் ஆகியோர் தொடர்பாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம்  2005 ம் மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்திற்குள் வைத்து நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த படுகொலை தொடர்பாக  விசாரனைகளை முன்னெடுத்த குற்றப்புலனாய்வுத் பிரிவினரால் குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கடந்த மாதம் 7ம் திகதி கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீதிமன்ற அனுமதியுடன்  குற்றப்புலனாய்வு தலைமையகத்தில்  தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.

இன்று புதன்கிழமை மட்டக்களப்பு  நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது இருவரும் மஜிஸ்திரேட் முன்னிலையில் குற்ற ஓப்புதல் வாக்கு மூலமொன்றை அளித்தனர்.

இதனையடுத்து  நீதிபதி  என். எம். எம். அப்துல்லாஹ் சந்தேக நபர்களை எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

இதே வேளை குறித்த படுகொலை தொடர்பாக  கடந்த 11ம் திகதி குற்றப்புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் எதிர்வரும் 10ம் திகதி வரை தடுத்து வைக்கப்பட்டள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.