பாடசாலை இடைவிலகள்,சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை இடை விலகலை தடுப்பதற்காவும் சிறுவர் துஸ்பிரயோகங்களை கட்டுப்பத்துவதற்குமான விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.


இதன் ஒரு கட்டமாக மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாணவர்கள் மற்றும் சிறுவர்களின் எதிர்கால நிலைமைகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் இன்று திங்கட்கிழமை முற்பகல் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி ஆணையாளர் என்.தனஞ்செயன் மாவட்ட சிறுவர் திணைக்கள அதிகாரிகள்,கல்வி வலய அதிகாரிகள்,பொலிஸ் சிறுவர் பிரிவு பொறுப்பதிகாரி,சமுர்த்தி,கிராம சேவை உத்தியோகத்தர்கள்,சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,பாலர்பாடசாலை திணைக்கள அதிகாரிகள் இதன்போது கலந்துகொண்டனர்.

இதன்போது மண்முனை வடக்கு பிரதேசத்தின் எல்லைப்பகுதிகளான திராய்மடு,புளியடிமுனை,சத்துருக்கொண்டான்,கொக்குவில்,அமிர்தகழி,மாமாங்கம் ஆகிய பகுதிகளில் மாணவர்கள் பாடசாலைக்கு சீராக செல்லாத நிலையுள்ளதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.பாடசாலை இடைவிலகளாகவே இவை கொள்ளப்படவேண்டும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் பதிவில் இல்லாமல் செயற்படும் முன்பள்ளிகளை மூடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதுடன் இயங்கிவரும் முன்பள்ளிகளின் செயற்பாடுகளை வினைத்திறன் மிக்கதாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கவும் இந்த கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டது.

குறிப்பாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் 08வீதமான சிறுவர்கள் முன்பள்ளிக்கு செல்லாமல் பாடசாலையில் இணைக்கப்படுவதன் காரணமாக அவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் இங்கு கருத்துகள் பரிமாறப்பட்டன.

பெற்றோர் அதிகளவில் அக்கரையினமாக செயற்படுவதும் பெற்றோர் வெளிநாடுகளுக்கு செல்வதும் பாடசாலை மாணவர்கள் இடைவிலகளுக்கு காரணமாக இருப்பதனால் இவ்வாறான சிறுவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்கள் தொடர்பான விபரங்களை திரட்டுவதற்கும் அறவூட்டுவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.