ஓய்வுபெற்றுச்செல்வோர் பல்வேறு தாக்கங்களுக்கு உட்படுகின்றனர் –மட்டக்களப்பு மாவட்ட செயலக கணக்காளர்

தினமும் அலுவலகத்திற்கு கடமையாற்றிவருவோர் திடீரென ஓய்வுபெறும்போது பல்வேறு தாக்கங்களுக்கு உட்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட செயலக கணக்காளர் கே.பிரேம்குமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அலுவலகங்களில் கடமையாற்றி ஓய்வுபெறும் நிலையில் உள்ள முதியவர்களுக்கான விசேட செயலமர்வு இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.

மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இரண்டு தினங்கள் நடைபெறவுள்ள இந்த செயலமர்வில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் சி.விக்னேஸ்வரன், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் ஆசிரிய ஆலோசகர் ரி.சிறிதரன், கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகத்தர் எஸ்.அருள்மொழி,மாவட்ட சமூகசேவைகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர் வி.செல்வநாயகம்,முதியோர் சம்மேளனத்தின் செயலாளர் கி.சிவபாதம் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு துறைகளில் கடமையாற்றி ஓய்வுபெறும் நிலையில் உள்ள 121பேர் கலந்துகொண்டனர்.

உத்தியோகத்தர் ஒருவர் ஓய்வுபேற்றுச்செல்லும் போது சமூகத்தில் எதிர்நோக்கும் சவால்கள் அவற்றினை எதிர்கொள்வதற்கு ஏதுவான மனோநிலையை வளர்த்துக்கொள்ளல்.அவர்களின் எதிர்கால திட்டமிடல்கள் தொடர்பில் இதன்போது கருத்துரைகள் வழங்கப்பட்டுவருகின்றன.

ஒருவர் காலையில் தொழிலுக்கு சென்று மாலை வீடு திரும்பியநிலையில் தொடர்ச்சியான நீண்டகால தொழிற்பாடாக நடைபெற்றுவரும்போது திடீரென அவர்களுக்கு ஓய்வு வழங்கப்படும்போது  அவர்கள் உளவியல் ரீதியான தாக்கத்திற்கும் பொருளாதார ரீதியான தாக்கத்திற்கும் உட்படுதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அந்த அடிப்படையில் ஓய்வுபெற்றுச்செல்லவுள்ளோரை தயார்படுத்தும் நோக்குடன் வளவாளர்களைக்கொண்டு தொடர்ச்சியான அறிவூட்டல் தெளிவூட்டல் வழிகாட்டல்களை மேற்கொள்வதற்கு மாவட்ட செயலகம் நடவடிக்கையெடுத்துவருகின்றது என்றார்.