பெரியகல்லாறில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் இன்று சனிக்கிழமை முற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பெரியகல்லாறு பிரதேசசபை காரியாலயத்திற்கு அருகில் தனியார் பஸ் ஒன்று இன்னுமொரு பஸ்ஸை முந்திச்செல்ல முயன்றபோது முன்னால் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த மருதமுனையை சேர்ந்த முகமட் அஸ்பர் மௌலானா (34வயது)என்பவர் உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

மருதமுனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச்சென்றவரே இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


தனியார் பஸ்களுக்கிடையில் இடம்பெற்ற போட்டியே இந்த விபத்துக்கு காரணம் என சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில்; விபத்தினை ஏற்படுத்திய பஸ்சின் சாரதியும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பஸ்சும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.