தாண்டவன்வெளியில் ஆன்ம இளைப்பாற்றிக்கான சிறப்புத்திருப்பலி

கத்தோலிக்க திருச்சபையானது நவம்பர் மாதத்தினை மரித்தோர்களை நினைவுகூர்ந்து அவர்கள் விண்ணகப் பேரின்பத்தை அடையும்பொருட்டு இறைவேண்டல் செய்வதற்காக பிரகடனப்படுத்தியுள்ளது.

இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மறைமாவட்டமானது,  திருகோணமலை மட்டக்களப்பு மறைமாவட்டமாகவிருந்தவேளையிலும், தற்போதும் இம்மறைமாவட்டத்தில் பணி செய்து இறைபதமடைந்த ஆயர்கள், குருக்கள், துறவிகள், போதகர்கள், நற்கருணைப்பணியாளர்கள், பொது நிலையினர் ஆகியோரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக சிறப்புத்திருப்பலியினை ஒப்புக்கொடுத்தது.

இத்திருப்பலியானது மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை.ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை தாண்டவன்வெளி, தூய காணிக்கை அன்னை தேவாலயத்தில் இடம்பெற்றது.

இத்திருப்பலியில் மட்டக்களப்பு, கல்முனை மறைக்கோட்டங்களில் பணியாற்றும் அருட்தந்தையர்கள், துறவற சபைகளின் அருட்சகோதர, சகோதரிகள், இறைமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஆயர் மற்றும் மட்டக்களப்பு மறைக்கோட்ட முதல்வர் ஆகியோரினால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.