. ( லியோன் ) மட்டக்களப்பு மாநகர நிருவாக எல்லைக்குட்பட்ட மாமாங்கம் – அமிர்தகழி கிராமத்தின் மத்தியில் அமைந்துள்ள மயானம் தொடர்பான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம் .உதயகுமார் தலைமையில் மாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது .
இது தொடர்பாக கலந்துரையாடலை மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கும் மற்றும் மாமாங்கம் , அமிர்தகழி , புன்னச்சோலை ஆகிய கிராம பிரிவுகளின் கிராம சேவை உத்தியோகத்தர்கள் , பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் , ஆலய நிருவாக சபை உறுப்பினர்கள் , கிராம பொது நல அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் முன்னால் மாநகர சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கும் மட்டக்களப்பு மாநகர ஆணையாளரினால் அழைப்பு விடுக்கப்பட்டு ஆணையாளரின் தலைமையிலான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது .
இடம்பெற்ற கலந்துரையாடலின் போது சம்பந்தப்பட்ட தரப்பினர் தாங்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர் .
இந்த மயானம் மாமாங்கம் – புன்னச்சோலை பிரதான வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ளதால் இரவு வேளைகளில் சூனியம் செய்பவர்கள் மற்றும் பேய் விரட்டுபவர்கள் மயானத்திலும், மயானத்திற்கு அருகாமையில் உள்ள பிரதான வீதியின் முற்சந்தியில் தமது சூனியம் தொடர்பான களிப்புகள் வேலைகளை செய்வதாகவும் ,
இவ்வேலைகளை செய்ததன் பின் அதற்காக உபயோகிக்கப்பட்ட பொருட்களை பிரதான வீதியில் வைத்து விட்டு செல்வதாகவும் , அதேபோன்று இந்த வீதி ஊடாக பயணிக்கு பயணிகள் மற்றும் வியாபாரிகள் தமது வீட்டு விலங்குகளின் கழிவு எச்சங்களை மயானத்தில் எரிந்து விட்டு போவதாலும் , கட்டாகாலி விளங்குகளினால் மயானத்தில் வீசப்பட்ட எச்சங்கள் பிரதான வீதியிலும் மயானத்திற்கு அருகாமையில் வசிக்கின்றவர்களின் குடியிருப்பு பகுதிகளிலும் கொண்டுவந்து போடுவதனால் தங்களும் தமது சிறு குழந்தைகளும் நோய் மற்றும் பல அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகவும் தெரிவிக்கப்பட்டது .
அதேபோன்று இம் மயானத்தில் சடலங்களை புதைப்பவர்கள் வீதிக்கு அருகாமையில் சடலங்கள் புதைப்பதாலும் மழைக்காலங்களில் மயான தாழ்நில பகுதியில் தேங்கி நிக்கின்ற மழைநீர் அருகாமையில் இருக்கின்ற வீட்டு கிணற்று நீருடன் கலந்து நீர் அசுத்தப்படுத்துவதாகவும் , அதேபோன்று இங்கு சடலங்கள் எரிக்கப்படுவதனால் இதனால் வெளியாகின்ற புகையால் இப்பகுதி சிறு குழந்தைகளின் நலன் பாதிக்கப்படுவதாகவும் கலந்துரையாடலின் போது சம்பந்தப்பட்டவர்கள் மாநகர ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர் .
இங்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடலில் கலந்துகொண்டவர்களினால் ஆராயப்பட்டு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது .
இடம்பெற்ற ஆணையாளரின் தலைமையிலான கலந்துரையாடலின் பின் இம் மயானத்திற்கான சுற்று மதில்கள் அமைக்கப்பட்டு மயானத்திற்கான காவலாளிகள் இருவரை நியமிப்பதோடு சடலம் எரிப்பதற்கான மாற்று நடவடிக்கை மேற்கொள்வதாகவும் இதன் போது தெரிவிக்கப்பட்டது .
இது தொடர்பான நடவடிக்கைகள் இரண்டு வாரத்திற்குள் மேற்கொள்வதாகவும் இதற்கான நிதியினை மாநகர ஆணையாளரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டுடன் கிராம அபிவிருத்தி சங்கள் ,
ஆலய நிருவாக சபைகள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களின் ஒத்துழைப்புடன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தீர்மானிக்கப்பட்டது .
இன்று இடம் பெற்ற இந்த கலந்துரையாடலில் பிரதி மாநகர ஆணையாளர் தனஞ்சயன் , அமிர்தகழி கிராம சேவை உத்தியோகத்தர் செல்வி .தர்ஷினி , பொருளாதார உத்தியோகத்தர் , அமிர்தகழி ,புன்னச்சோலை , மாமாங்கம் கிராம அபிவிருத்தி சங்கங்களின் உறுப்பினர்கள் , ஆலயங்களின் நிருவாக சபை உறுப்பினர்கள் , முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர் .