மட்டக்களப்பு சிறைக்கைதிகள் கூரை மேல் ஏறி போராட்டம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை விதிக்கப்பட்ட எட்டு கைதிகள் இன்று வெள்ளிக்கிழமை மாலை சிறைச்சாலையின் கூரை மீதேறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.


சிறைச்சாலையில் தாங்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்துவருவதாகவும் தமக்கு நீதி வேண்டும் எனக்கோரியே இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

சிறைச்சாலையில் தாங்கள் துன்பங்களை அனுபவித்துவருவதுடன் தம்மை பார்க்கவரும் உறவினர்களும் கெடுபிடிகளுக்கு உள்ளாவதாக போராட்டத்தில் பங்குகொண்டோர் தெரிவித்தனர்.

சிலருக்கு சிறைச்சாலையில் பல சலுகைகள் அளிக்கப்படுவதாகவும் தாங்கள் துன்புறுத்தப்படுவதாகவும் கைதிகள் தெரிவித்தனர்.

இவர்கள் அரசியல் கைதிகள் அல்ல இவர்கள் கப்பம் பெற்றமை, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுக்காக சிறைத் தண்டனை வழங்கப்பட்டவர்கள் என்று சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறைச்சாலையைச் சுற்றி பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளதோடு போராட்டக் காரர்களை கீழிறக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.