ஸ்ரீ.சு.க.-ஐ.தே.க.இணைந்து தமிழர்களுக்கு தீர்வு வழங்க முன்வரவேண்டும் –சீ.யோகேஸ்வரன் பா.உ

இலங்கையில் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்கு தேவையான சூழ்நிலையினை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து ஏற்படுத்தவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.


மட்டக்களப்பில் இருந்துவெளிரும் கலாண்டு சஞ்சிகையான தென்றல் சஞ்சிகையினால் நடாத்தப்பட்ட புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான முன்னோடிப்பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை கிரான்குளம் சீமூன் கார்டுன் விடுதியில் நடைபெற்றது.


இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,

'1977ஆம் ஆண்டு அ.அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவராக இருந்த பின்னர், தற்போது கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராகியுள்ளார். இது ஒரு சரித்திரமாகும்.

அவர் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். எனவே, இலங்கையிலுள்ள அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற எதிர்க்கட்சித் தலைவராக எமது தலைவர் இரா.சம்பந்தன் விளங்குகின்றார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகள், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்துள்ளது. 1956ஆம் ஆண்டு தமிழர்களுக்குரிய தீர்வை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கொண்டுவந்தபோது, அதனை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்த்தது. 1965ஆம் ஆண்டு தமிழர்கள் ரீதியாக ஒரு ஒப்பந்தத்தை ஐக்கிய தேசியக் கட்சி கொண்டுவந்தபோது அதனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்த்தது.

ஆனால் தற்போது இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் தேசிய அரசாங்கமாக வந்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக வந்துள்ளது. பெரும்பான்மை சிங்கள மக்களின் ஒத்துழைப்புடன் தமிழர்களுக்குரிய தீர்வுத் திட்டம் உருவாகும் என எதிர்பார்க்கின்றேன். எமது மட்டக்களப்பு தமிழ்ச் சமூகம் கடந்த காலங்களில் கல்வியிலே சிறந்து விளங்கியிருந்தது.

ஆனால் கடந்த கால யுத்த சூழல் எமது கல்வியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. யுத்த வடுக்களை சுமந்த வண்ணம் தற்போது மீண்டும் கல்வியில் முன்னேறிக் கொண்டு வருகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் மட்டுமல்லாமல் முழு இலங்கையில் உள்ள மக்களுக்கும் எதிர்க்கட்சி தலைவராக இருப்பதாகின்றார்.

தமிழர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கையினை எடுப்பது தேசிய அரசாங்கத்தில் இணைந்துள்ள இரண்டு பிரதான கட்சிகளின் கடமையாகும்.

இன்று கிழக்கு மாகாணசபையில் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைத்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் இவ்வாறான அநீதியான செயற்பாட்டினை மேற்கொண்டுவருகின்றார்.

இது தொடர்பில் கிழக்கு மாகாணசபையில் உள்ள இரண்டு அமைச்சர்களும் வாய்மூடி மௌனிகளாகவே இருந்துவருகின்றனர்.நாங்கள் இதனைபார்த்துக்கொண்டிருக்கமுடியாது.இது தொடர்பில் கிழக்கு மாகாணசபையின் ஆளுனரின் கவனத்துக்கு கொண்டுவரவுள்ளேன் என்றார்.