கல்முனையில் இந்திய வியாபாரிகள் நால்வர் கைது

உல்லாசப் பயணிகள் விசாவில் வந்து சட்ட விரோதமாகத் தங்கியிருந்து விற்பனையிலும் மாந்திரீக வேலைகளிலும் ஈடுபட்ட நான்கு இந்தியர்கள் கைது செய்யப்படடுள்ளார்கள் என்று கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.


சனிக்கிழமை இரவு கல்முனையிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் தங்கியிருந்த சமயம் இந்த இந்தியர்கள் சுற்றி வளைப்பின் மூலம் கைது செய்யப்பட்டார்கள்.

இந்தியா பெங்கழூரைச் சேர்ந்த மகி அக்கபாளி (வயது 30), தானிக் நவீன்குமார் (வயது 22), அக்கபாளி தேவராஜ் பிரகல்லாதன் (வயது 33), ஆயக்குட்டு சிவகுமார் (வயது 31) ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து இலங்கையில் விற்பனைக்கு அனுமதி பெறப்படாத ஒரு தொகை சட்டவிரோத விற்பனைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சிகை அலங்கார எண்ணெய் வகைகள், ஷம்பூக்கள், திராவகங்கள், உருத்திராட்ச வசிய மாந்திரீக அணிகலன்கள் என்று அவர்கள் கூறும் சில பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இந்தியர்கள் இரகசியமான முறையில் வீடுவீடாகச் சென்று பொருட்களை விற்பதிலும், வசிய மாந்திரீக வைத்திய முறைகளிலும் ஈடுபடுவதாக பொது மக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் கூறினர்.

கல்முனை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான அப்துல் கப்பாரின் நெறிப்படுத்தலில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைதான இந்தியர்களை நீதி மன்றில் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பொலிஸார் மேலும் கூறினர்.