அமெரிக்க அரசின் உதவியில் இனவிகிதாசாரம் பேணப்படவேண்டும் - ஜனா கடிதம்

அமெரிக்க அரசினால் இலங்கை அரசு சார்பாகவோ அல்லது மாகாணசபை ஊடாகவோ உதவிகளை வழங்கும் போது இனவிகிதாசாரம் பேணப்படவேண்டும் என்பதனை உதவி நிபந்தனைகளில் ஒன்றாக உள்ளடக்குமாறு அமெரிக்க தூதரகத்திடம் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.


இது தொடர்பில் அமெரிக்க தூதரகத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை கடிதம் (ஆங்கிலத்தில்) ஒன்றினை அனுப்பிவைத்துள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிழக்கு மாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பாக தங்களது கரிசனைக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் என்ற வகையில் எனது மேலான நன்றிகள்.
தங்களது அபிவிருத்தி நிதி உதவிகள் எமது மாகாணத்தில் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது என்பதை தங்களுக்கு அறியத்தர வேண்டியதும் எனது கடமையாகும்.

இலங்கையில் இன, அரசியல், பிரச்சினை தோற்றுவதற்கு அடிப்படைக் காரணமே வளப்பங்கீடுகளில் ஏற்பட்ட சமத்துவமின்மையேயாகும். இதனாலேயே இன்று இலங்கை இன, மத, மொழி ரீதியாக துருவப்படுத்தப்பட்டுள்ளது என்பதை நான் கூறித்தான் நீங்கள் அறியவேண்டும் என்பதில்லை.

அந்த வகையில் யு.எஸ்.எயிட் உதவிமூலம் பாடசாலை அபிவிருத்திக்காக எட்டு பாடசாலைகள் கிழக்கு மாகாணசபை ஊடாக தெரிவு செய்யப்பட்டதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் என்ற வகையில் நான் அறிந்துகொண்டேன்.

இத்தெரிவு தொடர்பாக மாகாணசபை உறுப்பினர்களுடன் எவ்வித கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படவில்லை என்பதையும் தங்களது கவனத்திற்கு அறியத்தருகின்றேன்.

கிழக்கு மாகாணசபை உயர் அதிகாரபீடம் இத்தெரிவு தொடர்பாக முற்றுமுழுதாக இனவாத அடிப்படையில் செயற்பட்டுள்ளதாகவே நான் கருதுகின்றேன். ஏனெனில் இத்திட்டத்தின்கீழ் தெரிவுசெய்யப்பட்ட எட்டு பாடசாலைகளில் ஏழு பாடசாலைகள் முஸ்லீம் பாடசாலைகள் என்பதுடன் தமிழ் பாடசாலையாக தெரிவுசெய்யப்பட்ட எட்டாவது பாடசாலைகூட 50%க்குமேல் முஸ்லீம் மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலையாகும்.

இலங்கையில் தமிழ்மொழிமூல பாடசாலைகள் தமிழ், முஸ்லீம்
பாடசாலைகள் என்றே உத்தியோகப+ர்வமாக பிரிக்கப்பட்டள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தவகையில் கிழக்கு மாகாணசபைக்கு ஒதுக்கப்பட்ட தங்களது நிதி உதவியினைக்கூட சமமாக பகிரப்பட முடியாத நிலையே எமக்கு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த முறையற்ற வளப்பங்கீடு தொடர்பாக மீள்பரிசீலனை செய்யுமாறு கிழக்கு மாகாணசபையினை கோருமாறு தங்களை கேட்டுக்கொள்கின்றேன்.

எதிர்காலத்தில் தங்களது அரசு சார்ந்த நிதியுதவிகளை இலங்கை அரசு சார்பாகவோ அல்லது மாகாணசபை ஊடாகவோ வழங்கும் போது இனவிகிதாசாரம் பேணப்படவேண்டும் என்பதனை உதவி நிபந்தனைகளில் ஒன்றாக உள்ளடக்கவேண்டுமென்ற வேண்டுகோளையும் தங்களிடம் முன்வைக்கின்றேன். இது எதிர்காலத்திலாவது வளப்பங்கீடுகள் சமமான முறையில் பகிரப்படுவதற்கு வழிவகுக்குமென நம்புகிறேன்.