மீள் குடியேற்றத்திற்கு தடையாகவுள்ள வழக்கை வாபஸ் பெறக் கோரி சம்பூர் பிரதேச மக்கள் உண்ணாவிரத போராட்டம்

திருகோணமலை  மாவட்டம் சம்பூர்  பிரதேச  மக்கள்  தமது  மீள் குடியேற்றத்திற்கு தடையாகவுள்ள வழக்கை  வாபஸ் பெறக் கோரி   உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.


நேற்று திங்கட்கிழமை  சம்பூர் பிரதேச வாசியொருவர்  கிளிவெட்டி இடைத் தங்கல் முகாம் முன்பாக  வழக்கு வாபஸ் பெறப்பட்டு     மீள்குடியேற்றத்தை  வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

அதற்கு புறம்பாக  சம்பூர் பத்திரகாளியம்மன்  ஆலயத்திற்கு முன்பாக  பொது மக்கள் ஓன்று கூடி மற்றுமோர் போராட்டம்   இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது..

தமது கோரிக்கைகள்  தொடர்பில் சாதகமான பதில் கிடைக்கும் வரை  போராட்டம்  தொடரும் என ஏற்பாட்டாளர்களினால் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பூர்   பிரதேசத்தில்  818 ஏக்கர் காணி  முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால்   2012.05.17 அன்று வெளியிடப்பட்ட    வர்த்தமானி அறிவித்தலின் படி கைத்தொழில் ஊக்குவிப்பு வலயமாக   பிரகடனப்படுத்த ப்பட்டிருந்தது.

2012.07.19 திகதியிடப்பட்ட  மற்றுமோர் வர்த்தமானி  பிரகடனத்தில் அந்த காணிகள்  முதலீட்டு  ஊக்குவிப்பு  வாரியத்திடம் கையளிக்கப்படுகின்றது.

தற்போதைய  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இம் மாதம் 7ம் திகதி  வெளியிடப்பட்ட  வர்த்தமானி அறிவித்தலின் படி   குறித்த இரு வர்த்தமானி அறிவித்தல்களும்  குறித்த மீள் குடியேற்றத்திற்காக ரத்து செய்யப்படுகின்றது.

இரத்து செய்வது தொடர்பாக வெளியிடப்பட்ட  வர்த்ததமானி  அறிவித்தலை ரத்து செய்யக் கோரி  முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் முதலீடு செய்ய தெரிவாகியிருந்த நிறுவனமொன்று உயர் நீதிமன்றத்தை மனுவொன்றை    தாக்கல் செய்திருந்தது.

அந்த மனுவை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம்  குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு  எதிர்வரும்  வியாழக்கிழமை வரை  இடைக் கால தடை விதித்துத்துள்ளது.

அன்றைய  தினம் இது தொடர்பாக விளக்கத்தை முன் வைக்குமாறு அரச சட்டவாதியை  நீதிமன்றம்  கேட்டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.