மட்டக்களப்பில் மீண்டும் துப்பாக்கி கலாசாரம் தோன்றியுள்ளதாக காட்டமுயற்சி –பிள்ளையான்

மட்டக்களப்பில் மீண்டும் ஆயுதக் கலாசாரம் தலைதூக்கியுள்ளது போன்ற பதற்ற நிலையினை ஏற்படுத்தியுள்ள மண்டூர் சூட்டுச் சம்பவத்தின் பின்னணி தொடர்பாக பொலிசார் துரித விசாரணை நடத்தி குற்றவாளிகளை அடையாளப்படுத்த வேண்டும் என கிழக்கு மாகாண உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.


மண்டூரில் இடம்பெற்ற துப்பாக்கிசூடு தொடர்பில் இன்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மட்டக்களப்பில் மீண்டும் ஆயுதக் கலாசாரம் தலைதூக்கியுள்ளது போன்ற  பதட்ட நிலையினை ஏற்படுத்தியுள்ள மண்டூர் சூட்டுச் சம்பவத்தின் பின்னணி தொடர்பாக பொலிசார் துரித விசாரணை நடத்தி குற்றவாளிகளை அடையாளப்படுத்த வேண்டும் .

ஜனநாயக ரீதியான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில் இடம் பெற்ற சமூக சேவை உத்தியோகஸ்தரின் மீதான சூட்டுச் சம்பவம் மக்கள் மத்தியிலும் சமூக அலுவலகர்கள் மத்தியிலும் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளதுடன் கருத்தை கருத்தால் வெல்ல வேண்டிய நிலையில் கருத்தை கருவியால் வெல்ல முற்படும் குற்றவாளிகளை சமூகத்தில் அடையாளப்படுத்த வேண்யது மிக அவசியமானதொன்றாகும்.
சமூகத்திற்காக தம்மை அர்ப்பணித்து செயற்பட்ட சமூக சேவை உத்தியோகஸ்தர் சச்சிதானந்தம் மதிநயன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தினை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது.

அலுவலக ரீதியாக மட்டுமன்றி தனது பொது வாழ்விலும் ஆன்மீகத்திற்காகவும் சமூகத்திற்காகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய ஓர் மனிதனின் மறைவு மிகவும் துக்ககரமானது.

நல்லாட்சியில் மக்கள் ஜனநாயக ரீதியில் தலை நிமிர்வுடன் இருக்கலாம் என்ற நிலையில் மட்டக்களப்பில் அதிகரித்து வரும் வன்முறைகள் தடுத்து நிறுத்தப்பட்டு சட்டத்திற்கு முன் சம்பந்தப்பட்டவர்கள் அடையாளப்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.