“இனிமேல் யாரும் என்னைப் போன்று விவரம் தெரியாமல் தவறிழைத்து விடக் கூடாது” –ஆதங்கத்தை வெளியிட்டார் உதயஸ்ரீ

“இனிமேல் யாரும் என்னைப் போன்று விவரம் தெரியாமல் தவறிழைத்து விடக் கூடாது. இதுபோன்ற விடயத்துக்காகத் தண்டிக்கப்பட்ட கடைசி நபர் நானாகத்தான் இருக்க வேண்டும்”  என்ற தனது ஆதங்கத்தை வெளியிட்டார் இரண்டரை மாதம் சிறையிலிருந்து விடுதலையாகி வீடு; வந்து சேர்ந்த உதயஸ்ரீ.


நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் கீழ் நாட்டின் தலைவருக்கிருக்கின்ற அதிகாரம் உதயஸ்ரீயின் விடயத்தில் மிகுந்த நன்மையளித்திருக்கிறது.

நல்ல மனிதர்களின் கைகளில் இருக்கின்ற அதிகாரம் நன்மையளிப்பதற்குப் பயன்படும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.இரண்டு வருடம் சிறைத் தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட கைதியாக அனுராதபுரம் சிறைச்சாலையில் எதிர்காலம் கேள்விக் குறியாகி முடங்கிக் கிடந்த உதயஸ்ரீ விhயழக்கிழமை உதயமாகும்போதே விடுதலை செய்யப்பட்டார்.

இரண்டு வருட காலம் அனுபவிக்க வேண்டியிருந்த சிறை வாழ்க்கை இரண்டரை மாதத்தில் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதற்கு ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம்தான் காரணமாக இருந்தது.

பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி சிகிரியாவைப் பார்ப்பதற்காக  சுற்றுலாச் சென்றிருந்த வேளையில் சுவரோவிய சுவரில் எழுதியதான குற்றச் சாட்டின் பேரில் தொல்பொருள் திணைக்களம் பதிவு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் உதயஸ்ரீ சிகிரியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

மார்ச் 02 ஆம் திகதி தம்புள்ளை நீதிமன்றம் உதயஸ்ரீக்கு 2 வருட சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

விபரீதம் தெரியாமல் இடம்பெற்ற தவறுக்காக அவருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு உதயசிஸ்ரீயின் தாயாரும் வேறு சில  சமூக, சிவில் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் ஜனாதிபதியிடம் மன்றாடியிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து ஏப்ரல் முதலாம் திகதி உதயஸ்ரீக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார்.

எனினும் சித்திரைப் புத்தாண்டையொட்டி தொடராக வந்த நீண்ட நாள் விடுமுறை காரணமாக ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு குறித்த கடிதம், சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு அனுப்ப தாமதமாகியிருந்தது.

அதேவேளை, உதயஸ்ரீயை உடனடியாக விடுதலை செய்வதற்கு அவர் சார்பில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விலக்கிக் கொள்ளப்படாமையால் அந்த விவகாரம் உதயஸ்ரீயின் விடுதலையில் தாமதத்தை ஏற்படுத்தியிருந்தது என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில்  உதயஸ்ரீ சார்பில் வழக்குத் தொடர்ந்த நல்லாட்சிக்கான மனித உரிமைகள் இயக்கமும், மனித உரிமைகள் இல்லமும் கண்டி மேல் நீதிமன்றத்தில் வைத்து புதன்கிழமை (29.04.2015) வழக்கை விலக்கிக்கொண்டதை அடுத்து உதயஸ்ரீயை உடனடியாக விடுவிப்பதாக சிறைச்சாலை அதிகாரிகள் அறிவித்தனர்.

எனினும் இந்த அறிவிப்பு கிடைக்கும் போது புதன்கிழமை மாலையாகி இருள் சூழ்ந்து விட்டதாலும் மட்டக்களப்பிலிருந்து அனுராதபுரம் செல்ல நீண்ட நேரமெடுக்கும் என்பதாலும் மறுநாளான வியாழக்கிழமை காலையில் சிறைச்சாலைக்கு வந்து உதயஸ்ரீயை அழைத்துச் செல்வதாக அவரது உறவினர்கள் சிறைச்சாலை அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தனர்.

அதன்படி வியாழன் காலை எட்டு மணியளவில் உதயஸ்ரீ சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகி வெளியுலகத்தை எட்டிப்பார்த்தார்.
உதயஸ்ரீயை அழைத்து வருவதற்காக அவரது உறவினர்கள் வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கே சித்தாண்டியிலிருந்து அனுராதபுரம் சிறைச்சாலை நோக்கிப் புறப்பட்டு விட்டனர்.

உதயஸ்ரீயின் விடுதலை தொடர்பான அறிவித்தல் கேள்விப்பட்டதிலிருந்து உதயஸ்ரீயின் குடும்பம் மகிழ்ச்சிப் பிரவாகத்தில் திளைத்தது.

இரண்டு வருடம் சிறைத் தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட உதயஸ்ரீ சரியாக இரண்டரை மாதங்களுக்குப் பின்னர் சிறையிலிருந்து விடுதலையாகி தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.

சிகிரியா சுவரோவியமும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. அதேவேளை உதயஸ்ரீயும் அந்த வரலாற்றில் தடம் பதித்த ஒருவராகி விட்டார்.

காரணம் சிகிரியாவில் தவறிழைத்தமைக்காக  வரலாற்றில் அதிகூடிய இரண்டு வருடங்கள் சிறைத் தண்டனை பெற்றவர் என்பதும் அத்தண்டனை ஜனாதிபதியின் பொது மன்னிப்பினால் இரண்டரை மாதத்தில் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு விடுதலை செய்யப்பட்டது என்பதும் மற்றொரு சரித்திரமாகும்.

உதயஸ்ரீயின் விடயத்தில் இன்னொரு சிறப்பும்சமும் நடந்தேறியிருகின்றது. இன முரண்பாடுகள் கூர்மையடைந்து அந்த நெருக்கடிக்குள் நாட்டு மக்கள் சிக்கியிருக்கின்ற இந்தத் தறுவாயில் உதயஸ்ரீயின் விடயத்தில் இன, மத, மொழி. பிரதேச வேறுபாடுகள் பார்க்கப்படவில்லை.

நாட்டு மக்கள் அனைவரும் உதயஸ்ரீயின் விடுதலைக்காக ஏகோபித்துக் குரல் கொடுத்ததும் செயற்பட்டதும் என்று எல்லாமே ஏக காலத்தில் நடந்தேறியிருந்தது.