கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டவர்களின் உறவினர்களை தொடர்புகொள்ளுமாறு கோரிக்கை

மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்செய்த நிலையில் நாடுதிரும்பியபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களின் உறவினர்களை தன்னுடன் தொடர்புகொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,

புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதை தொடர்ந்து மத்திய கிழக்கு நாட்டுக்கு தொழில்வாய்ப்பினைப்பெற்றுச்சென்ற மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த பல இளைஞர்கள் நாடு திரும்பியிருந்தனர்.

இவர்களில் 16க்கும் மேற்பட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலைகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் செவ்வாய்க்கிழமை மாலை பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெற்ற சட்டத்துக்கும் சமாதானத்துக்குமான அமைச்சின் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் விரிவாக எடுத்துக்கூறினேன்.

கடந்த காலத்தில் தமது அச்சநிலையினை போக்க வாக்களித்த மக்கள் இன்று கைதுகள் மூலம் மீண்டும் அச்சநிலைக்குட்படுத்தப்படுவதை அனுமதிக்கமுடியாது என தெரிவித்தேன்.

எனவே கைதுசெய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவித்து இதுபோன்ற கைதுகள் இனிவரும் காலங்களில் நடைபெறாதவண்ணம் நடவடிக்கையெடுக்குமாறு இதன்போது சட்டத்துக்கும் சமாதானத்துக்குமான அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடம் வேண்டுகோள்விடுத்தேன்.

இதன்போது அமைச்சர் கைதுசெய்யப்பட்டவர்களின் உறவினர்களை சந்திக்க ஏற்பாடுசெய்துதருமாறும் அவர்களுடன் கலந்துரையாடி கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்க நடவடிக்கையெடுப்பதாகவும் அத்துடன் இனிவரும் காலங்களில் கைதுகளை தடுக்க நடவடிக்கையெடுப்பதாகவும் என்னிடம் உறுதியளித்துள்ளார்.

இந்த நிலையில் அமைச்சருடனான சந்திப்பு எதிர்வரும் வாரங்களில் நடைபெறவுள்ளதால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டவர்களின் உறவினர்களை என்னுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.