சர்வதேச மத்தியஸ்ததுடன் தமிழர்களுக்கான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவேண்டும் - ஜனா

சர்வதேச மத்தியஸ்ததுடன் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வினைப்பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை காலம் தாழ்த்தாது தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னெடுக்கவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.


மட்டக்களப்பில் இருந்துவெளிவரும் காலாண்டு இதலான தென்றல் சஞ்சிகையினால் பட்டிப்பளை பிரதேச ஐந்தாம் தர மாணவர்கள் மத்தியில் நடாத்திய புலமைப்பரிசில் முன்னோடிப்பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

கொக்கட்டிச்சோலை இராம கிருஸ்ண வித்தியாலயத்தில் தென்றல் சஞ்சிகையின் ஆசிரியர் க.கிருபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

தென்றல் சஞ்சிகையானது தனது சஞ்சிகை வெளியீட்டைம ட்டும் கொண்டிருக்காமல் ஐந்தாம் தர மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் பாரிய பங்களிப்பினை ஆற்றிவருகின்றது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

நவீன தொழில்நுட்பம் என்பது நெருப்பினை போன்றது.அதனைக்கொண்டு வீட்டையும் எரிக்கலாம் சமைத்தும் சாப்பிடலாம்.அதேபோன்று நவீன தொழில்நுட்பம் ஊடாக எதிர்காலத்தினை பாழாக்கிக்கொள்ளுவோரும் உள்ளனர்.அதன் மூலம் அறிவினைப்பெற்றுக்கொள்வோரும் உள்ளனர்.அன்னத்தினைப்போன்று தேவையானவற்றை மட்டுமே மாணவர்கள் பெற்றுக்கொள்ளவேண்டும்.

மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை எந்தவித பின்னடைவுகளும் இன்றி சிறப்பாக கொண்டுசென்று பல்வேறு துறைகளிலும் பிரகாசிக்கும்போதே எதிர்காலத்தில் எமது சமூகத்தின் வளர்ச்சிபாதைக்கு அது உதவியாக இருக்கும்.

இன்று இந்த மாவட்டத்தில்,மாகாணத்தில்,தேசிய ரீதியில் சாவாலான நிலையில் தமிழ் மாணவர்களின் கல்வி நிலையுள்ளது.கடும் போட்டிக்கு மத்தியிலேயே மாணவர்கள் உள்ளனர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு காலத்தில் நாங்கள் கல்வியில் கொடிகட்டிப்பறந்தபோது இங்கு வியாபாரத்தில் முன்னிற்கு நின்றவர்கள் இன்று எங்களை பின்தள்ளிவிட்டு கல்வியிலும் முன்னுக்கு செல்லும் நிலையிருந்துவருகின்றது.

கடந்த காலத்தில் இப்பகுதிகளில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக மாணவர்களுக்கு ஏற்பட்ட தாக்கம் இன்று இலங்கையின் உயர் பதவி நிலைகளில் தமிழர்கள் இல்லாத நிலையினை ஏற்படுத்தியுள்ளது.அந்த நிலைமையினை நாங்கள் மாற்றவேண்டுமானால் மாணவர்கள் தங்களை முழுமையாக கல்வியில் அர்ப்பணிக்கவேண்டும்.

இந்த நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது.கடந்த ஜனவரி 08ஆம் திகதிக்கு முன்னர் எமது மக்களை அடிமைகளாக வைத்திருந்த ஆட்சி மாறியிருக்கின்றது.ஜனநாயக ஆட்சி இந்த நாட்டில் மலர்ந்துள்ளது.

இதன் ஊடாக தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அவர்களின் அபிலாசைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வினை நோக்கி இந்தநாடு சென்றுகொண்டுள்ளது.

அந்தவகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு காத்திரமாக புதிய அரசாங்கத்துடன் சர்வதேச மத்தியஸ்ததுடன் பேச்சுவார்த்தையினை நடாத்தி தமிழ் மக்களுக்கான தீர்வினைப்பெற்றுக்கொள்ளவேண்டும்.

இந்த நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து தமிழர்கள் பாதிப்பினை எதிர்கொண்டுவந்தார்கள்.அதற்கு எதிராக தமிழர்கள் போராடிவந்தார்கள்.இதன்போது பண்டா-செல்வாஒ ப்பந்தம் உட்பட பல ஒப்பந்தங்களும் செய்யப்பட்டு அவை கிழித்தெறியப்பட்ட வரலாறுகள் எங்களுக்கு உள்ளது.

அதன் காரணமாகவே சர்வதேச மத்தியஸ்த்ததுடன் ஒரு காத்திரமான பேச்சுவார்த்தை நடாத்தப்படவேண்டும் அதன் ஊடாக எமது பிரச்சினைகளுக்கு தீர்வு வரவேண்டும்.தற்போது எமது பகுதிகளில் நிலவும் சூழ்நிலை தொடரவேண்டும்.