கிழக்கு மாகாணசபையில் தமக்கு ஒரு அமைச்சினை வழங்கும் வாய்ப்பு உள்ளதாகவும் அதற்கான உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கிழக்குமாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சு பதவி வழங்கப்படவிருப்பது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைபபு செயலாளர்; சுசில் பிரேம ஜயந்த,தற்போதைய ஜனாதிபதியும் கிழக்கு மாகாணசபையில் தமிழ் மக்களுக்கு சமனான வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்ற கருத்தினைக்கொண்டுள்ளனர்.அந்த வாய்ப்பு எனக்கு வழங்கப்படவேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.
அந்த வாய்ப்பு வரவுள்ள நிலையில் அது தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் அது தொடர்பான வேண்டுகோளைவிடுத்தபோது அங்கும் தற்போதை நிலைமை கருதியும் தமிழ் மக்களின் நன்மை கருதி அமைச்சர் பதவியை ஏற்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அது தொடர்பில் கிழக்கு மாகாணசபையின் வரவு-செலவுத்திட்டம் முடிந்ததும் அது தொடர்பிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.