முஸ்லிம் காங்கிரஸ் யாருடன் உள்ளது என்பது புரியாத விடயமாகவே உள்ளது –ஜனா

முஸ்லீம் காங்கிரஸ் எங்கு இருக்கின்றது பொதுஜன ஐக்கிய முன்னணியுடனா? அல்லது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடனா அல்லது தனியாகவா? பொது ஜன ஐக்கிய முன்னணியில் இருந்த வேளை மத்திய, மாகாண அமைச்சுப் பதவிகளையும் துறந்தார்கள். ஆனால், தற்போது பொது ஜன ஐக்கிய முன்னணில் இருந்து பிரிந்த குழுவினருடன் இணைந்து மத்தியில் மாற்றத்தை விரும்பும் குழுவினராகவும் மாகாணத்தில் பொது ஜன ஐக்கிய முன்னணிக்கு முண்டு கொடுப்பவர்களாகவுமே உள்ளார்கள் என கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா)தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2012ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸ{டன் கிழக்கில் ஆட்சி அமைத்ததன் காரணமாகவே வடக்கில் தேர்தல் நடத்தப்பட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி அமைத்ததாக அண்மையில் முஸ்லிம் காங்கிரஸ் கூறியுள்ளது.இவ்வாறான கருத்துகளை இவர்கள் தெரிவிப்பது வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடாகும்.

இந்தியாவின் அழுத்தமும் சர்வதேச சமூகத்தின் அழுத்தமுமே வடக்கில் தேர்தல் நடத்தப்படுவதற்கான காரணம் என்பதை இவர்கள் அறியாதவர்கள் போல் உள்ளது வேதனைக்குரியதாகும்.

முஸ்லீம் காங்கிரஸ் கட்சியினர் இதுவரை தமது பேச்சு வன்மையாலும் வாதத்திறமையாலும் முஸ்லீம் மக்களை மட்டுமே குழப்பி வந்தனர். தற்போது முழுநாட்டு மக்களையும் குழப்ப முயற்சிக்கின்றார்கள். கிழக்கு மாகாண சபை ஆட்சி அமைப்பு தொடர்பாக அண்மைக்காலமாக அவர்களால் வெளியிடப்படும் அறிக்கைகளை நோக்கும் போது இவ்வாறு தான் எண்ணத் தோன்றுகின்றது.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லீம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து போட்டியிட்டு பின்பு அதிலிருந்து பிரிந்து பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் இணைந்து அமைச்சர் பதவிகளுடன் அரசின் பங்காளிகளாகியது.

அவ்வாறே மாகாண சபைத் தேர்தலிலும் அரசுடன் இணையாது தனியாக போட்டியிட்டு –அரசை விமர்சித்து – தேர்தலின் பின் அரசுடன் இணைந்து மாகாண சபையில் ஆட்சி அமைத்தது பின்னர் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தல் நடைபெறுவதற்கு ஒருவாரகாலத்துக்குள் பொது ஜன ஐக்கிய முன்னணியில் இருந்து விலகுவதாகவும் இதன் காரணமாக மத்திய அரசில் வகித்த அமைச்சுப் பதவிகளை துறப்பதாகவும் அறிவித்தது. இவையாவும் முஸ்லீம் காங்கிரசின் தனிப்பட்ட விடயம். இதில் குறை நிறை காண்பதோ விமர்சிப்பதோ எனது நோக்கமல்ல.

முஸ்லீம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபை ஆட்சி அமைக்கும் போது பொதுஜன ஜக்கிய முன்னணியுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்வதாகவும் அதன்படி இரண்டரை வருட கால பங்கீடு அடிப்படையில் முதலமைச்சர் பதவி பேணப்படவேண்டும் என்பதாகவும் அக்காலத்தில் பேசப்பட்டது. ஆனால் ஜனாதிபதித் தேர்தலுக்கு சற்று முன்னரான காலப்பகுதியில் இவ்வொப்பந்தம் தொடர்பாக முஸ்லீம் காங்கிரஸ் வினாவெழுப்பிய வேளை அப்போதைய ஆட்சியாளர்களால் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டதாகவும் ஒரு கொசுறுத் தகவல். இவை எல்லாம் எமக்கு அப்பாற்பட்டது.

நாம் இப்போது பிரச்சினையாகப் பார்ப்பது என்னவெனில் கிழக்கு மாகாண சபை ஆட்சி தொடர்பாக முஸ்லீம் காங்கிரஸ் முன்வைக்கும் வாதம்தான். இரண்டரை வருட காலப் பகிர்வுடனான முதலமைச்சர் விவகாரமும் அது  தொடர்பான ஒப்பந்தமும் முஸ்லீம் காங்கிரசுக்கும் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கும் உரிய விவகாரம். அவர்களது கூற்றுப்படி பொதுஜன ஐக்கிய முன்னணியில் இருந்து அவர்கள் விலகிய போதே அவ்வொப்பந்தமும் வலுவிழந்து விட்டது.

வலுவிழந்த ஒப்பந்த அமுலகாக்கம் தொடர்பாக அதில் ஒரு தரப்பாக அல்லாத தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுடனோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனோ வாதிடுவது எவ்வகையிலும் பொருத்தமானது அல்ல என்பதுடன், அரசியல் தார்மீக ஒழுக்கத்துக்கும் ஒவ்வாதது. தற்போதைய ஜனாதிபதி அவர்கள் பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் எவ்வித சம்பந்தமும் அற்றவர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மட்டுமே.

எமது சந்தேகம் தற்போது முஸ்லீம் காங்கிரஸ் எங்கு இருக்கின்றது பொதுஜன ஐக்கிய முன்னணியுடனா? அல்லது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடனா அல்லது தனியாகவா? ஏன் எனில் பொது ஜன ஐக்கிய முன்னணியில் இருந்த வேளை மத்திய, மாகாண அமைச்சுப் பதவிகளையும் துறந்தார்கள். ஆனால், தற்போது பொது ஜன ஐக்கிய முன்னணில் இருந்து பிரிந்த குழுவினருடன் இணைந்து மத்தியில் மாற்றத்தை விரும்பும் குழுவினராகவும் மாகாணத்தில் பொது ஜன ஐக்கிய முன்னணிக்கு முண்டு கொடுப்பவர்களாகவுமே உள்ளார்கள். இந்த நிலைமைகளே இவர்கள் தொடர்பாக இவ்வாறு என்னை சிந்திக்கத் தூண்டியது.

இவர்கள் ஒன்றை மட்டும் தெளிவாக உணர வேண்டும். உங்களது பேச்சு வன்மையாலோ, மொழி வளத்தாலோ, வாதத் திறமையாலோ முஸ்லீம் மக்களோ தமிழ் மக்களோ அல்லது ஒட்டு மொத்த நாட்டு மக்களோ குழம்பவில்லை. அவர்கள் மிகவும் தெளிவான சிந்தனையுடனே உள்ளார்கள். நீங்களே உங்களுக்குள் குழம்பிக் கொள்கின்றீர்கள்.