உரிமைகளைக் கௌரவிக்கிற புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும் - கிழக்கின் பெண்கள் கோரிக்கை

அரசியல் தீர்க்கதரிசனம், பரஸ்பர புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்புகள் ஆகியவற்றுடன் செயலாற்றும், பதவிகளுக்குப் போட்டியிடாத, ஒரு இனத்தை மற்ற இனம் மதிக்கிற, உரிமைகளைக் கௌரவிக்கிற ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை நாம் உருவாக்க வேண்டும் என கிழக்கு மாகாண பெண்களது கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

அரசியல் ஞானத்துடன் மக்கள் நலனை முன்னிறுத்திச் செயற்படுங்கள்! என்ற விழிப்புடன், சமூகச் செயற்பாட்டார்கள், பெண்உரிமைவாதிகள், கல்வியாளர்கள், சமூக நிறுவனங்கள் உள்ளிட்ட கிழக்கின் பெண்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கில் ஏற்பட்டுள்ள மாகாண சபை ஆட்சியமைப்பு அரசியல் கட்சிகளிடையேயான  பிரச்சினைகள் குறித்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட இந்தஅறிக்கையின் முழு வடிவம்,
சமீபகாலமாகக் கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் தொடர்பாகத் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் நடந்தன எனவும் அவற்றில் எத்தகைய இணக்கப்பாடும் எட்டப்படவில்லை எனவும் பத்திரிகை வாயிலாக அறிகிறோம். முதலமைச்சர் பதவி தமிழருக்கா முஸ்லிம்களுக்கா என்ற இழுபறிநிலை ஏற்பட்டுள்ளதை மிகுந்த விசனத்துடன் அவதானிக்கிறோம்.

நீண்ட காலத்தின் பின் இலங்கை மக்கள் தமது வாக்குப் பலத்தினால் மக்களின் நல்வாழ்வுக்குச் சாதமாக ஒரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள தருணம் இது. கிழக்கில் இனத்துவரீதியில் குறிப்பாக தமிழர், முஸ்லிம் எனப் பிளவுபடுத்தப்பட்டிருந்த மக்களிடையே இயல்பான ஒரு ஒத்த கருத்தும் நல்லாட்சிக்கான நாட்டமும் இருந்ததைத் தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன.

இத்தகைய தன்னெழுச்சியான சுயசிந்தனை, சுயமான செயல். ஒற்றுமை என்பவை பிரக்ஞை ரீதியாகக் கவனத்துடன் நிதானமாகப் பேணி நிலை நிறுத்தப்படுவது இன்றைய முக்கிய தேவையாகும். இல்லாவிடின் இதற்குப் பல்வேறு பக்கங்களிலிருந்தும் ஆபத்து ஏற்படக்கூடும்.

கிழக்கில் முஸ்லிம்களும் தமிழரும் பிரிந்து நின்று சண்டையிட்டதால் ஏற்பட்ட இழப்புக்களை  எவரும் மறுக்க முடியாது.  இரு இனத்தவருமே தமது சொந்தங்களை இழந்தனர். நிலங்களை இழந்தனர். வாழிடங்களிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர். கண்ணுக்குக்கண்ணான பிள்ளைகளை இழந்த முஸ்லிம், தமிழ் அன்னையர்களை நாம் ஒன்றாகப் பல இடங்களிலும் காண்கிறோம்.

இந்நிலை தொடரக்கூடாது. இரு இனங்களும் ஒற்றுமையாகக் கிழக்கு மாகாணசபையை அதற்குரிய அதிகாரங்களுடனும், பொறுப்புகளுடனும் நன்கு இயங்கச் செய்ய வேண்டும்.  அதனால் கிழக்கு பெறக்கூடிய நன்மைகள் அதிகம். கிழக்குவாழ் மக்கள், வாக்காளர்களில் ஒரு பகுதியினர், பல்வேறு பாரிய இழப்புகளை எதிர் கொண்ட பெண்கள் என்ற வகையில் அபூர்வமாக ஏற்பட்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை குறுகிய அரசியல் நலன்களுக்காக இழக்கக்கூடாது என அழுத்திச் சொல்கிறோம்.

அரசியல் தீர்க்கதரிசனம், பரஸ்பர புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்புகள் ஆகியவற்றுடன் செயலாற்றும், பதவிகளுக்குப் போட்டியிடாத, ஒரு இனத்தை மற்ற இனம் மதிக்கிற, உரிமைகளைக் கௌரவிக்கிற ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை நாம் உருவாக்க வேண்டும்.

புதிய மாற்றம் எம்முள்ளிருந்துதான் வரவேண்டும்.  ஒருவருக்கு ஒருவர் மதிப்பளித்து, ஏற்பட்ட இழப்புகளை அங்கீகரித்து அவற்றிலிருந்து மீள முயற்சித்து நல்லிணக்கத்துடன் சுமுகமான உறவையும் சுபீட்சமான எதிர்காலத்தையும் கிழக்கு வாழ் அனைத்து மக்களும் பெற வேண்டும்.

எமது எதிர்கால சந்ததிக்கு அதைக் கையளிக்க  வேண்டும். வரலாற்றிலிருந்து கற்றவற்றை, இன்று வரலாறு எமக்கு அளிந்துள்ள புதிய  சந்தர்ப்பத்தில் பயன்படுத்துவோம். இல்லாவிடின ; வரலாற்றைத் தவறவிட்டவர்கள் ஆவோம்.