மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தியை நோக்காக கொண்டு ஐந்தாண்டு திட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டு ஐந்தாண்டு திட்டம் தொடர்பில் அறிமுகம் செய்யும் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.


மட்டக்களப்பு மாவட்ட செயலக அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண திட்டமிடல் திணைக்களத்தின் பிரதி பிரதம செயலாளர் வி.மகேந்தரராஜா கலந்துகொண்டார்.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள திணைக்களங்களின் தலைவர்கள்,பிரதேச செயலாளர்கள்,உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள்,அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

2014ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டுவரையில் மேற்கொள்ளப்படவுள்ள பாரிய அபிவிருத்திப்பணிகள் தொடர்பில் வரையப்பட்டுள்ள திட்டம் தொடர்பில் ஆராய்ந்து அதனை விரிவாக்கம் செய்து நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இங்கு ஆராயப்பட்டது.

விவசாயம்,நீர்பாசனம்,வீதி அபிவிருத்தி,பாலங்கள்,மனித வள அபிவிருத்தி உட்பட ஆறு துறைகளை அபிவிருத்தி செய்யும் வகையில் இந்த ஐந்து ஆண்டு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரணையும் யு.என்.டி.பி யும் மாவட்ட செயலகமும் இணைந்து இந்த செயற்திட்டத்தினை வடிவமைத்துள்ளது.

ஐந்தாண்டு திட்டத்துக்காக 80ஆயிரத்து 796 மில்லியன் ரூபாவினை செலவிடும் வகையில் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.