வெட்டுக்காடு பகுதியில் மருத்துவசான்றிதழ் இன்றி நடத்தப்பட்ட உணவு விடுதிகளுக்கு நீதிமன்றம் தண்டம் விதிப்பு

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட வெட்டுக்காடு பொதுச்சுகாதார பகுதிகளில் மருத்துவச்சான்றிதலைக்கொண்டிராத நான்கு உணவு விடுதிகளின் உரிமையாளர்களுக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் 24ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதித்துள்ளதாக வெட்டுக்காடு பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர் அமுதமாலன் தெரிவித்தார்.


இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த வாரம் வெட்டுக்காடு பகுதியில் உணவு விடுதிகளில் திடீர் சோதனை நடவடிக்கையெடுக்கப்பட்டது.

இதன்போது மருத்துவச்சான்றிதலைக்கொண்டிராத ஐந்து உணவு விடுதியாளர்களுக்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதன்போது இரு உரிமையாளர்களுக்கு தலா ஐந்தாயிரம் ரூபா வீதமும் மேலும் இரு உரிமையாளர்களுக்கு தலா ஆறாயிரம் ரூபா வீதம் தண்டப்பணம் விதிக்கப்பட்டதாகவும் அமுதமாலன் தெரிவித்தார்.

அதில் ஒருவர் இன்று நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் அவருக்கு வேறு ஒரு தினம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

வெட்டுக்காடு பகுதிகளில் உள்ள மக்களின் சுகாதார நலனை கருத்தில்கொண்டு தொடர்ச்சியாக இவ்வாறான திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் வெட்டுக்காடு பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர் அமுதமாலன் மேலும் தெரிவித்தார்.