வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சீருடை விநியோகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான பாடசாலை சீருடை விநியோக நடவடிக்கைகள் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் விசேட நிதியொதுக்கீட்டின் மூலம் இந்த சீருடை விநியோகங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

வெள்ளம் காரணமாக பல வீடுகள் நீரில் மூழ்கியதன் காரணமாக மாணவர்களுக்கு சீருடைகள் இல்லாத நிலையிருந்தது.
இந்த நிலையில் ஜனாதிபதியிடம் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விடுத்தவேண்டுகோளுக்கு அமைவாக உடனடியாக இந்த விசேட நிதியொதுக்கீடு மூலம் இந்த இலவச சீருடைகள் வழங்கப்பட்டுவருகின்றன.

இதன்கீழ் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான சீருடைகள் வழங்கும் நிகழ்வு வெல்லாவெளி; கலைமகள் வித்தியாலயத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் முதல் கட்டமாக இரண்டாயிரம் மாணவர்களுக்கான சீருடைகள் இதன்போது பிரதியமைச்சரினால் வழங்கிவைக்கப்பட்டது.

தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு இந்த இலவச சீருடை வழங்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மீள்குடீயேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர்களான பொன்.ரவீந்திரன்,ருத்திரமலர் ஞானபாஸ்கரன் உட்பட பாடசாலை அதிபர்கள்,பெற்றோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.