மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 09வது ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிப்பு

(சுஜி)

மட்டக்களப்பில் கிறிஸ்மஸ் ஆராதனையின்போது 2005ஆம் ஆண்டு மார்கழி மாதம் 25ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 09வது ஆண்டு நினைவு தினம் இங்கு அனுஸ்டிக்கப்பட்டது.

இன்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பில் உள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரான பா.அரியநேத்திரன்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், ஞா.கிருஸ்ணபிள்ளை, மா.நடராஜா,பிரசன்னா இந்திரகுமார் உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கத்தின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கத்தின் திருவுருவப்படத்துக்கு அருட்தந்தை மேரி அடிகளார் முமதல் தீபச்சுடரை ஏற்றியதை தொடர்ந்து அதிதிகளால் தீபச்சுடர் ஏற்றப்பட்டதுடன் ஆத்மசாந்தி மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து நினைவுரைகள் நிகழ்த்தப்பட்டதுடன் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கத்தின் நினைவுகளும் பகிரப்பட்டன.