பயணிகளை மயக்கி கொள்ளைகளில் ஈடுபட்டுவந்தவர் களுவாஞ்சிகுடி பொலிஸாரால் கைது – மேலும் ஒருவருக்கு வலை வீச்சு

மட்டக்களப்பு வரும் பயணிகளை மயக்க மருந்து வழங்கி மயக்கி கொள்ளைகளில் ஈடுபட்டுவந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் முச்சக்கர வண்டியொன்றும் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஒருவரை தேடி வருவதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.


கடந்த மாதம் 23ஆம் திகதி களுவாஞ்சிகுடி நகரில் மயங்கிய நிலையில் சம்மாந்துறையினை சேர்ந்த இளைஞர் ஒருவர் மயங்கிய நிலையில் மீட்க்கப்பட்டு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மூன்று தினங்கள் மயங்கிய நிலையில் இருந்து மீண்டபின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் முச்சக்கர வண்டியுடன் அதன் சாரதியும் கைதுசெய்யப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி டபிள்யு.எஸ்.சனத் நந்தலால் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 23ஆம் திகதி கதுறுவலையில் உள்ள கோழி பாம் ஒன்றில் கடமையாற்றும் சம்மாந்துறையினை சேர்ந்த முகமட் டில்சான் என்பவர் சம்மாந்துறைக்கு செல்வதற்காக கதுறுவல பஸ் நிலையத்தில் காத்திருந்துள்ளார்.

இந்தவேளையில் அங்கு நின்றிருந்த நபர் ஒருவர் தாமும் கல்முனைக்கு செல்லவுள்ளதாகவும் முச்சக்கரவண்டி வரவுள்ளதாகவும் பணம் தரத்தேவையில்லையெனவும் குறித்த இளைஞனை அழைத்துள்ளார்.

இவரும் முச்சக்கர வண்டியில் வந்துகொண்டிருந்தபோது ஓட்டமாவடிப்பகுதியில் வைத்து இவருக்கு குளிர்பானம் வாங்கிக்கொடுத்துள்ளனர்.இவர் அதனை அருந்திய நிலையில் முச்சக்கர வண்டியில் மயங்கியுள்ளார்.

இந்த நிலையில் இவரை களுவாஞ்சிகுடி நகர்ப்பகுதியில் அதிகாலை வேளை இறக்கிவிட்டு அவரின் லப்டொப் மற்றும் கையடக்க தொலைபேசி,பணம் என்பனவற்றினை கொள்ளையிட்டுச்சென்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி டபிள்யு.எஸ்.சனத் நந்தலால் தலைமையிலான் பொலிஸ் குழுவினரும் மட்டக்களப்பு பொலிஸ் புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளும் இது தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொண்டுவந்தனர்.

மேற்கொள்ளப்பட்டுவந்த விசாரணையின் அடிப்படையில் முச்சக்கர வண்டி சாரதி பொலநறுவை மாவட்டத்தின் சுங்காவில் பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டதுடன் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியும் மீட்கப்பட்டது.

அவரிடம் மேற்கொள்ளப்பட்டுவந்த விசாரணையின் அடிப்படையில் கொள்ளையிடப்பட்ட பொருட்கள் கொழும்பில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொள்ளையின் முக்கிய சூத்திரதாரியென சந்தேகிக்கப்படும் மற்றைய நபரை தேடி வருவதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவரை களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி முன்னியிலையில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 11ஆம் திகதி வரை அடையாள அணிவகுப்புக்காக விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.