மண்டூர் 13ஆம்கொலணியில் கணிணி ஆய்வுகூடம் திறந்துவைக்கப்பட்டது

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லவெளி பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட மண்டூர் 13ஆம்கொலணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள கணிணி ஆய்வுகூடம் திறந்துவைக்கப்பட்டது.

பட்டிருப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தொலைத்தொடர்பு தகவல் தொழில்நுட்ப பிரதியமைச்சர் பிரபா கணேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

தேசத்துக்கு மகுடம் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சுமார் 45 இலட்சம் ரூபா செலவில் இந்த கணிணி ஆய்வுகூடம் அமைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புற கிராமத்தில் இந்த நவீன கணிணி ஆய்வுகூடம் திறக்கப்பட்டுள்ளமையானது இப்பிரதேச மாணவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாகும்.

இந்த ஆய்வுகூட திறப்பு விழாவில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெட்னம்,போரதீவுப்பற்று கோட்டக்கல்வி பணிப்பாளர் பூ.பாலச்சந்திரன் மற்றும் தொலைத்தொடர்பு தகவல் தொழில்நுட்ப பிரதியமைச்சின் செயலாளர்கள் மற்றும் கல்வித்திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் கோரிக்கைக்கு அமைவாக இந்த கணிணி ஆய்வுகூடம் இங்கு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.