கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையினை உலகளவில் பிரபலப்படுத்தும் வகையிலும் அதற்கான வரைபடத்திட்டம் ஒன்றின் கீழ் இணையத்தளம் ஊடாக வலுப்படுத்தும் வகையிலும் உலக வங்கியின் சந்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியில் ஜிஓ ருவரிசம் (Geotourism ) எனப்படும் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தில் சுற்றுலாத்துறை வளங்கள், இடங்கள், வரலாற்று முக்கதியத்துவம் மிக்க இடங்கள், மக்கள், கலாசாசரம், பண்பாடு உணவு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய இணையத்தளம் ஒன்று செயற்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து இந்த ஈஸ்ரன் சிறிலங்கா எனப்படும் இணையத்தளத்தினை நசனல் ஜோக்கிரபி (National Geographic) செயற்படுத்தவுள்ளது.
தற்போது மக்கள், சமூகத்தவர்கள், வரலாற்று, சமூக விடயங்களில் அக்கறையுள்ளவர்கள், கல்வியாளர்கள் என அனைவரும் சுற்றுலா, மற்றும் கலாசார பண்பாட்டு விடயங்களைப் பதிவு செய்யும் வகையிலான வழி ஒன்று இந்த இணையத்தளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதில் யாரும் தங்களது பிரதேசங்களில் அறிந்த சுற்றுலா சார்ந்த விடயங்களைப் பதிவு செய்து கொள்ள முடியும்.
இது தொடர்பாக ஊடகவியலாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் சந்திப்பொன்று இன்றைய தினம் பகல் மட்டக்களப்பில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் நசனல் ஜோக்கிரபியின் சுற்றுலாத்துறைக்கான பணிப்பாளர் ஜிம் டியோன் இத்திட்டம் தொடர்பான விளக்கங்களை வழங்கினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உல்லாசப்பயணத்துறை வல்லுனர் சோன் மாண் முன்வைத்த சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பான திட்டத்தின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே ஆகியவற்றின் நிதியில் இந்த கிழக்குமாகாண சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதற்கு பிரதேச மக்களது தகவல்களே இந்த இணையத்தளத்தினை முழுமைபடுத்துவதாக இருக்கும். எனவே அனைத்து தரப்பினரும் சுற்றுலாத்துறை தொடர்பான, வரலாற்றுத் தலங்கள் உள்ளிட்ட தகவல்களை வழங்கலாம் என்றும் நசனல் ஜோக்கிரபியின் சுற்றுலாத்துறைக்கான பணிப்பாளர் ஜிம் டியோன் தெரிவித்தார்.
ஆர்வமுள்ளவர்கள் http://www.easternsrilanka.com என்ற இணையத்தளத்தினுள் நுழைந்து தங்களிடமுள்ள தகவல்களைப் பதிவு செய்து சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு ஆதரவு வழங்கலாம்.
இம்மாதம் முதல் எதிர்வரும் 2015ஆம் வருடத்தின் ஜூன் மாதம் வரையில் இவ்வாறான பதிவுகள் நடைபெற்று முழுமையடைந்த பின்னர் இந்த இணையத்தளம் சுற்றுலாத்துறைப் பாவனைக்கானதாகத் திறந்து விடப்படும்.
இத்திட்டம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அனுமதியுடனும் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர்களினதும் அனுமதியுடன் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
http://www.easternsrilanka.com/participate.php என்ற தொடுப்பின் ஊடாக இந்த இணையத்துடன் இணைந்து கொள்வதன் மூலம் தகவல்களை அனுப்பி வைக்க முடியும்.
வழங்கப்படும் தகவல்கள் துறைசர்ந்தவர்களுடன் கலந்துரையாடப்பட்டு சரி பார்க்கப்பட்டு பின்னர் இணையத்தளத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்.