வேலைபெற்றுத்தருவதாக கூறி பெருமளவு இளைஞர்களிடம் பணம்பெற்று ஏமாற்றும் பேர்வழிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிலர் வேலைபெற்றுத்தருவதாக கூறி வறிய இளைஞர்களிடம் பணத்தினைப்பெற்று ஏமாற்றிவருவதுடன் சிலர் அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு வீதங்களும் கோரி வருவதுடன் அழுத்தங்களை பிரயோகித்துவருவதாகவும் இவற்றினை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை உரிய தரப்பினர் முன்னெடுக்கவேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலகமாக வேலைபெற்றுத்தருவதாக கோரி சில அரசியல்வாதிகளின் பெயரைப்பயன்படுத்தி வறிய இளைஞர் யுவதிகளிடம் பெருமளவு பணம் பெறப்பட்டு அவர்கள் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன.

அண்மையில் கிராணைச்சேர்ந்த ஒருவர் பலரிடம் பணத்தினைப்பெற்றுக்கொண்டு தலைமறைவாகியுள்ளார்.அவரிடம் பணம் வழங்கியவர்கள் எல்லாம் மிகவும் வறிய நிலையில் உள்ளவாகள்.

அவர்கள் தமது நிலைமைகள் தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை வழங்கியுள்ளபோதிலும் அதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

இது தொடர்பில் சிலர் எனது கவனத்துக்கு கொண்டுவந்தனர்.அவர்களின் பணத்தினை விரைந்துபெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

அதுமட்டுமன்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப்பணிகளுக்கு பலர் வீதம் கேட்பதாக தகவல்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன.

முக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் இவ்வாறான அபிவிருத்திகளில் வீதம் வாங்கும் நடவடிக்கையை உரியவர்கள் கைவிடவேண்டும்.இது எமது மக்களுக்கு வரும் அபிவிருத்திகள் அவற்றில் வீதம் வாங்கி அதனை வலுவற்றதாக்கவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.