பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசாவை "வாயைமூடுமாறு" கூறிய காத்தான்குடி நகர முதல்வர் -மட்டு.அபிவிருத்திக்குழு கூட்டத்தில் அமளிதுமளி

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசாவை "வாயை மூடுமாறு" காத்தான்குடி நகரசபை தலைவர் அஸ்பர் கூறியதனால் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது.


மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் தலைமையில் திங்கட்கிழமை (29) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, பி.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடம் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித்திட்டங்களும் அவற்றின் முன்னேற்றம் பற்றியும் ஆராயப்பட்டன.

மேலும் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித்திட்டங்கள்,  பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டிலான அபிவிருத்தித்திட்டங்கள் உள்ளிட்டவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடம் 14,261 திட்டங்களுக்காக 7,812 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 2,121 அபிவிருத்தித்திட்டங்கள் முடிவடைந்துள்ளது.

இதன்போது வாவி மற்றும் நீரியல்வளம் தொடர்பிலான கலந்துரையாடலின்போது காத்தான்குடி பிரதேச சபை தவிசாளர் அஸ்வர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா ஆகியோருக்கு இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினரை வாயை மூடுமாறு காத்தான்குடி பிரதேச சபை தவிசாளர் அஸ்வர் கூறியபோது அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

காத்தான்குடி பிரதேச சபை தவிசாளர் அஸ்வர் தனது கூற்றினை வாபஸ்பெறாவிட்டால் அபிவிருத்திக்குழு கூட்டத்தினை நடத்தமுடியாத நிலையேற்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்ட நிலையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இதன்போதுமாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வாயைமூடுமாறு கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது.ஒரு பாராளுமன்ற உறுப்பினரை அவ்வாறு நீங்கள் கூறமுடியாது.அதனை உடனடியாக வாபஸ்பெறுமாறு கோரியதற்கு இணங்க காத்தான்குடி பிரதேச சபை தவிசாளர் அஸ்வரினால் அக்கூற்று வாபஸ்பெறப்பட்டதை தொடர்ந்து தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.