மட்டக்களப்பு மாவட்டததில் பால்நிலை அடிப்படை வன்முறைகளைக் குறைப்பதற்கான மாவட்ட ரீதியான வலையமைப்பை உருவாக்குதல் தொடர்பான செயலமர்வொன்று இன்றைய தினம் (25) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் நடைபெற்றது.
தேவை நாடும் மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த செயலமர்வில், உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சுதர்சன், அவ் அமைப்பின் தலைமையக திட்ட இணைப்பாளர் செல்வி அபிராமி ஜெயச்சந்திரன், சட்டத்தரணி திருமதி அருள்வாணி சுதர்சன், மாவட்ட இணைப்பாளர் திருமதி சங்கீதா தர்மரஞ்சன், உளவளத்துணையாளர் திருமதி ஜெயதீபா பத்மஸ்ரீ, கண்காணிப்பு உத்தியோகத்தர் திருமதி சந்திரா தியாகராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிறுவர் பெண்கள் தொடர்பான விடயங்களில் சட்ட உதவி, ஆற்றுப்படுத்தல், கண்காணித்தல் உள்ளிட்ட செயற்பாடுகளை மேற்கொண்டுவரும் இவ் அமைப்பின் தலைமையகம் கொழும்பிலும், அனுராதபுரம், கண்டி,மாத்தறை, யாழ்ப்பாணம் ,புத்தளம், குருநாகல், மட்டக்களப்பு, உள்ளிட்ட மாவட்டங்களிலும் செயற்பட்டு வருகிறது.
இன்றைய தினம் நடைபெற்ற பால்நிலை அடிப்படை வன்முறைகளைக் குறைப்பதற்கான மாவட்ட ரீதியான வலையமைப்பை உருவாக்குதல் தொடர்பான செயலமர்வில் மாவட்டத்தில் பெண்கள் தொடர்பில் செயற்படும் அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம சேவையாளர்கள், பொலிஸ் உத்தியெகாத்தர்கள் உள்ளிட்டோரும் பங்கு கொண்டனர்.
இதன்போது எதிர்வரும் 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படுத்தப்படவுள்ள பொலிஸ் நிலையங்களில் செயற்படும் பெண்கள் சிறுவர் பிரிவுகளை வலுப்படுத்தும் செயற்திட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.