நுகர்வோர் சட்டத்தினை மீறிச்செயற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக கடந்த ஆண்டு 665 சட்ட நடவடிக்கைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில், நுகர்வோர் சட்டத்தினை மீறும் வகையில் செயற்பட்டவர்களுக்கெதிராக 2013ஆண்டு 665 சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட நுகர்வோர் அதிகாரசபை பொறுப்பதிகாரி ஆர்.எப்.அன்வர் சதாத் தெரிவித்தார்.


அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸின் பணிப்பின் பேரில் நுகர்வோர் சட்டத்தை மீறி நுகர்வோரைப் பாதிக்கும் வகையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட வியாபாரிகளிடமிருந்து தண்டப்பணமாக 10 லட்சத்து 12ஆயிரத்துத் 900 ரூபா அறவிடப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு நகர், ஏறாவூர், செங்கலடி, சித்தாண்டி, வாழைச்சேனை, ஓட்டமாவடி, வாகரை உள்ளிட்ட பிரதேசங்களில் நுகர்வோர் அதிகாரசபையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் இவர்கள்மீது நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தச் சுற்றிவளைப்புகளில் பொறுப்பதிகாரி ஆர்.எப்.அன்வர் சதாத் தலைமையில்கே.கரிதரன், என்.எம்.சப்ராஸ், ரி, சுதர்சன் போன்றோர் பங்கு கொண்டனர்.

அதேநேரம், கடந்த வருடத்தில் நுகர்வோருக்கும் வியாபாரிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில் வியாபாரிகள். பாடசாலை மாணவர்கள், அரச, அரசசார்பற்ற நிறுவனப்பிரதிநிதிகள் பங்கு கொள்ளும் வகையில் நுகர்வோர் கருத்தரங்குகள் 52 நடத்தப்பட்டுள்ளன.

இவற்றுக்குப் பொறுப்பாக ரிபுஸ்பானந்தி, கே.ரஜிதரன், எஸ்.ரதீஸ்ராஜா, ஆகியோர் செயற்பட்டிருந்தனர் என்றும் மாவட்ட நுகர்வோர் அதிகாரசபை பொறுப்பதிகாரி ஆர்.எப்.அன்வர் சதாத் தெரிவித்தார்.

இதே நேரம் நுகர்வோர் பாதுகாப்புக் குறித்து தகவல் தெரிவித்த அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,

நுகர்வோரைப்பாதிக்கின்ற வகையில், பதுக்கல் வியாபாரம், குறிப்பிட்ட விலைக்கு மேலாக விற்பனை செய்தல், தரக்குறைவான பொருட்களை விற்பனை செய்தல் காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல் போன்ற நுகர்வோரைப் பாதிக்கின்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் வியாபாரிகளுக்கெதிராக நீதிமன்றத்தின் ஊடாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே இவ்வாறான நடவடிக்கைகளை வியாபாரிகள் தவிர்த்து நுகர்வோரைப்பாதிக்காத வகையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுதல் வேண்டும்.அவ்வாறில்லாத பட்சத்தில் மிகவும் இறுக்கமான நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படும் என்று தெரிவித்தார்.