காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜித் பிரசன்னாவுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காத்தான்குடியை தளமாக கொண்டு வெளிவரும் 'வார உரைகல்' பத்திரிகையின் பிரதம ஆசிரியர் புவி.எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்வினாலேயே இந்த முறைப்பாட்டை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு ஆணைக்குழுவின் பணிப்பாளரிடம் புவி றஹ்மதுழ்ழாஹ்வினால் கையளிக்கப்பட்டுள்ளது. பரிசீலனையின் பின் முறைப்பாடு விசாரணைக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டது என ஆணைக்குழுவின் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 30ம் திகதி தேடுதல் நடாத்துவதற்கான சட்டரீதியான கட்டளைகள் எதுவுமில்லாது சிவில் உடையணிந்த நிலையில் மோப்ப நாயொன்றுடன் தனது வீட்டிற்கு வந்த காத்தான்குடி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் தனது வீட்டிலிருந்து ஒரு பார்சல் கஞ்சாவைக் கைப்பற்றியதாகக் கூறி தன்னைக் கைது செய்து காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரித்ததோடு தனக்கெதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் 198 கிராம் கஞ்சா தனது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டதாகவும் பொய்யான வழக்கொன்றைத் தாக்கல் செய்திருப்பதை ஆட்சேபித்தே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது, மனித உரிமைகள் ஆர்வலரான ருக்கி பெர்ணாண்டோ, சுதந்திர ஊடகவியலாளர் இயக்கத்தின் செயலாளர் சுனில் ஜெயசேகர மற்றும் சட்டத்தரணி உதயன் ஆகியோரும் பிரதம ஆசிரியருடன் ஆணைக்குழு அலுவலகத்திற்குச் சென்றிருந்தனர்.
பிரிதம ஆசிரியரின் முறைப்பாட்டினையும் இணைக்கப்பட்டிருந்த ஆதாரங்கள், ஆவணங்களையும் எவ்வித ஆட்சேபனையுமின்றி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
எனினும் முறைப்பாட்டாளரான பிரதம ஆசிரியரின் வயது, காத்தான்குடியிலிருந்து கொழும்பிற்கு வந்து செல்லும் பிரயாணத் தூரம் மற்றும் ஏனைய சிரமங்கள் போன்றவற்றையும் கருத்திற்கொண்டு இம்முறைப்பாட்டினை மட்டக்களப்பிலுள்ள தமது அலுவலகத்தின் மூலம் விசாரணை செய்வதற்கு விரும்புவதாகத் ஆணைக்குழுவின் பணிப்பாளர் தெரிவித்தார்.
