கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களுக்கிடையிலான கிரிக்கட் போட்டியில் மட்டக்களப்பு மாநகரசபை சம்பியன்

கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களுக்கிடையில் நடத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மாநகரசபை வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தினை தனதாக்கிக்கொண்டது.

கிழக்கு மாகாண உள்ளுராட்சி திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இந்த சுற்றுப்போட்டி நடைபெற்றது.

இந்த சுற்றுப்போட்டியில் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் உள்ள பிராந்திய உள்ளுராட்சி அலுவலகம் மற்றும் மாநகர,நகரசபை ஆகியவற்றின் அணிகள் மற்றும் கிழக்கு மாகாண உள்ளுராட்சி திணைக்களத்தின் அணி என்பன பங்குகொண்டன.

இதன் ஆரம்ப நிகழ்வில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் உதயகுமார் உட்பட உள்ளுராட்சி ஆணையாளர்களும் கலந்துகொண்டனர்.

ஆறு ஓவர்களைக்கொண்ட இந்த கிறிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் மட்டக்களப்பு மாநகர அணியும் கிழக்கு மாகாண உள்ளுராட்சி திணைக்கள அணியும் மோதின.

இதன்போது முதலில் துடுப்பெடுத்தாடிய கிழக்கு மாகாண உள்ளுராட்சி திணைக்கள அணி ஆறு ஒவர்களில் நான்கு விக்கட்டுகளை இழந்து 48 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு மாநகர அணியினர் ஒரு விக்கட்டுகளை இழந்து 51 ஓட்டங்களைப்பெற்று வெற்றிவாகை சூடினர்.

இறுதியில் வெற்றிபெற்றவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்பட்டதுடன் இறுதிப்போட்டியின் சிறந்த வீரராக மட்டக்களப்பு மாநகரசபையினை சேர்ந்த சோதிராஜா தெரிவுசெய்யப்பட்டார்.