மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழில் அற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும் விசேட செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உற்பத்தி திறன் மேம்பாட்டு அமைச்சின் ஆலோசனையின் கீழ் மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களம் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுவருகின்றது.
இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களிலும் உள்ள வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் வகையில் பிரதேச செயலகம் தோறும் தொழில் சந்தை நடத்தப்பட்டுவருகின்றது.
இதன் கீழ் களுவாஞ்சிகுடி பிரதேசத்துக்குட்பட்ட வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் மாபெரும் தொழில் சந்தையொன்று இன்று காலை களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் மனிதவள அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரதேச செயலாளர் சுதாகர் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி பாக்கிராஜா,மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் முகாமையாளர் குகதாஸ் மற்றும் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் பகிரதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த தொழில் சந்தையில் 20க்கும் மேற்பட்ட தொழில் வழங்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டதுடன் தொழில் வாய்ப்பற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டனர்.