வவுணதீவில் காவியா பெண்கள் அமைப்பு மூலம் வறுமை ஒழிப்புக்கான விவசாய உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் திவிநெகும தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வறுமையற்ற மாவட்டத்தினை உருவாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இதன் கீழ் மிகவும் பின்தங்கிய பிரதேசமான வவுணதீவு பிரதேசத்தில் வாழ்வாதாரத்தினை உயர்த்தும்வகையில் மிகவும் பின்தங்கிய கிராமத்தின் பொருளாதாரத்தினை உயர்த்தும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

வவுணதீவு பிரதேச செயலகத்துடன் இணைந்து காவியா பெண்கள் அபிவிருத்தி அமைப்பு மற்றும் சுவிடிஸ் கூட்டுறவு அபிவிருத்தி நிலையம் என்பன இணைந்து இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.

இதன் கட்டமாக வவுணதீவில் மிகவும் வறுமை நிலையில் உள்ள மக்களைக்கொண்ட கற்பககேணி கிராமம் தெரிவுசெய்யப்பட்டு அங்கு சேனைப்பயிர்ச்செய்கையினை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் கீழ் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான சேனைப்பயிர்ச்செய்கைக்கான உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு வவுணதீவு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் காவியா பெண்கள் அபிவிருத்தி அமைப்பின் தலைவி திருமதி ரதி அஜித்குமார், சுவிடிஸ் கூட்டுறவு நிலையத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் மயூரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு சேனை பயிர்ச்செய்கையினை மேற்கொள்வதற்காக கச்சான், உழுந்து, சோளம், கௌவி போன்ற விதைப்பொருட்கள்,விவசாய உற்பத்தி உபகரணங்கள்,பயன்தரு மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டன.