கல்முனை மாநகர சபையின் புதிய முதல்வருக்கு ஆடை அணிவிக்கும் விழாவும் பொது கூட்டமும்

( எஸ்.எம்.எம்.றம்ஸான் )

கல்முனை மாநகர சபையின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் நாயகமும் சட்ட முதுமாணியுமான எம்.நிசாம் காரியப்பர் அவர்களுக்கு முதல்வர் ஆடை அணிவிக்கும் விழாவும் பொது கூட்டமும் நேற்று ஞாயிற்றுக்கிழமை  இரவு கல்முனை நகர மண்டபத்திற்கு அருகாமையில் பிரதான வீதியில்  இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் அப்துல் சத்தார் தலைமையில் இடம் பெற்ற பெருவிழாவில்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நீதியமைச்சருமான ரஊப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காஙகிரஸின் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம், ஏ.எல்.எம்.நஸீர், கட்சியின் மூத்த துணைத் தலைவர் ஏ.எல்.ஏ.மஜீத் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன் கல்முனை பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ.அசீஸ், கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, மாநகர சபை சபை உறுப்பினர்களான ஏ.ஏ.பஷீர், ஏ.எம்.றக்கீப், ஏ.எம்.பரக்கத்துல்லாஹ், உமர் அலி, எம்.எம்.முஸ்தபா உட்பட மற்றும் பல அரசியல் பிரமுகர்களும் பெருந்திரளான பொது மக்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் முதல்வர் நிசாம் காரியப்பருக்கு பிரதம அதிதியால் முதல்வர் ஆடை அணிவிக்கப்ட்டதுடன் , பல்வேறு பொது அமைப்புகளினாலும் பிரமுகர்களினாலும் பொன்னாடை போர்த்தியும் நினைவுச்சின்னங்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.