மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இப்தார் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நேற்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

05வது வருடமாகவும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு சிறப்பான முறையில் நடத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த இப்தார் வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் எஸ்.வாசுதேவன், கணக்காளர் எம்.எஸ்.பசீர் உட்பட பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக அதிகாரிகள் முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதில் ஆன்மீக உரையினை கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் துறைத்தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் எம்.ரி.எம்.றிஸ்வி மஜீதி நிகழ்த்தினார்.

இதனைத்தொடர்ந்து இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் மூவினங்களையும் சேர்ந்த உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.