மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில், றெப்பியாவின் செயற்பாட்டுப் பணிப்பாளர் டி.கே.ஜினதாச தலைமையில் நடைபெற்ற இவ் நேர்முகப் பரீட்சையில் பிரதிப் பணிப்பாளர் ஆனந்த விஜயபால, மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர் நெஞ்செழியன், இலங்கை வங்கியின் மட்டக்களப்பு மேல் தரக்கிளையின் சிரேஸ்ட முகாமையாளர் நடராஜா அருட்சோதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இத்திட்டத்தின் கீழ் பிரதேச செயலாளர்கள் ஊடாக சுயதொழில் ஊக்குவிப்புகளுக்காக விண்ணப்பித்த 469 பேருக்கு சுயதொழில் ஊக்குவிப்புக் கடக்கள் வழங்கப்படவுள்ளன.
இதில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 323 பேருக்கு 2 லட்சத்து 50ஆயிரம் ரூபா வீதமும், கணவனை இழந்த பெண்களுக்கு ஒரு லட்சம் ரூபா வீதமும் இலங்கை வங்கி ஊடாக கடன் வழங்கப்படவுள்ளது.
வருடத்துக்கு 4 வீத வட்டியில் வழங்கப்படும் இக் கடன்கள் 4 வருட த்தில் மீளச் செலுத்தும் வகையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும், யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பிரதேச செயலாளர்கள் ஊடாக விண்ணப்பித்ததன் அடிப்படையில் றெப்பியா இலங்கை வங்கியுடன் பேச்சு நடத்தியதற்கமைவாக வழங்கப்படுவதாகவும், நேர்முகப்பரீட்சைகளின் பின்னர் இலங்கை வங்கி முறையாக விண்ணப்பதாரிகளுக்கு அறிவித்து இரு பிணையாளிகளுடன் இந்தக் கடன்களை வழங்கும் என மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர் நெஞ்செழியன் தெரிவித்தார்.
2009ஆம் ஆண்டுக்கு முன்னர் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாவட்ட புனர்வாழ்வு புனரமைப்பு செயலகத்தின் கீழ் இயங்கி வந்த றெப்பியா, அதன் பின்னர் மாவட்ட திட்டமிடல் செயலகத்தின் கீழ் இயங்கி வருகிறது.
இதுவரை றெப்பியாவினால் கடந்த காலங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சுயதொழில் கடன்கள், இறந்தவர்களுக்கான நஸ்ட ஈடாக ஒருலட்சம் வீதமும், காயப்பட்டவர்களுக்கு பாதிப்பின் அடிப்படையிலும், நிவாரணங்கள் வழங்கப்பட்டிருந்தன.