வீரமுனை கிராமத்தில் வீரமுனை படுகொலை நாள் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.


அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வீரமுனை கிராமத்தில் வீரமுனை படுகொலை நாள் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.

12-08-1990ஆம் ஆண்டு முஸ்லிம் ஊர்காவல் படையிரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து ஆலயம் மற்றும் பாடசாலைகளில் தஞ்சமடைந்திருந்த மக்கள் மீது தாக்குதல் நடாத்தி சுமார் 85க்கும் அதிகமான மக்களை படுகொலைசெய்த நாளினைக்குறிக்கும் வகையில் இந்த வீரமுனை படுகொலை வாரம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

12-08-1990ஆம் ஆண்டு வீரமுனை சிந்தாயத்திரைப்பிள்ளையார் ஆலயம்,வீரமுனை இராம கிருஸ்ண வித்தியாலயம் ஆகியவற்றில் தங்கியிருந்த மக்கள் மீது விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் வந்த முஸ்லிம் ஊர்காவல் படையினரால் இந்த மிலேச்சத்தனமாக படுகொலை நடாத்தப்பட்டது.

வெட்டியும் சுட்டும் தாக்கியும் சுமார் 85க்கும் அதிகமானோர் இதன்போது படுகொலைசெய்யப்பட்டனர்.இதன்போது படுகாயமடைந்து அம்பாறை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட 20க்கும் மேற்பட்டோர் காணாமல்போயிருந்தனர்.

அவர்களுக்கு இதுவரையில் என்ன நடந்தது என்ற நிலை இதுவரையில் தெரியாத நிலையில் 36 வருடங்களை கடந்துள்ளபோதிலும் வீரமுனை படுகொலைக்கு இதுவரையில் எந்த விசாரணையும் முன்னெடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் நேற்றும் இன்றும் வீரமுனையில் வீரமுனை படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் வீரமுனை மக்களால் நடாத்தப்பட்டது.

இன்றைய தினம் வீரமுனை சிந்தாயத்திரைப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள படுகொலை நினைவுத்தூபியில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

1990ஆம் ஆண்டுகளில் வீரமுனை, வளத்தாப்பிட்டி, வீரச்சோலை, மல்வத்தை, புதுநகர், கணபதிபுரம், கோரக்கர்கோயில், மல்லிகைத்தீவு மற்றும் அதனைச்சூழவுள்ள பகுதி மக்கள் வீரமுனை பாடசாலை மற்றும் சிந்தாயத்திரைப்பிள்ளையார் ஆலயத்தில் தஞ்சமடைந்திருந்தனர்.

இதன்போது ஊர்காவலம் படையினர் மற்றும் இராணுவத்தினர் விசேட அதிரடிப்படையினரினால் திடீர் திடீர் என சுற்றிவளை;ககப்பட்டு பலர் கொண்டுசெல்லப்பட்டு காணாமல்ஆக்கப்பட்டிருந்த சூழ்நிலையிலேயே 12-08-1990ஆம் ஆண்டு வீரமுனைக்குள் இந்த படுகொலை நடாத்தப்பட்டன.

இன்று காத்தான்குடி படுகொலை மற்றும் ஏறாவூர் படுகொலை தொடர்பில் பேசும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் பொது அமைப்புகளும் வீரமுனை படுகொலை தொடர்பில் பேசுவதற்கு முன்வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.